Publish Date: Wed, 25 Jun 2025 (10:52 IST)
Updated Date: Wed, 25 Jun 2025 (10:53 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்கள், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இலக்காக 371 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி இந்த இலக்கை எட்டி சாதனை வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்த போட்டியின் பெரும்பாலான செஷன்களில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய போதும் கடைசி இரண்டு நாட்களில் இங்கிலாந்து வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி இந்தியாவிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர். இந்த தோல்விக்குப் பின்னர் பேசியுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
அதில் “நான் தனித்தனி வீரர்களைப் பற்றி குறை சொல்லப் போவதில்லை. நாங்கள் ஒட்டுமொத்தமாகத் தோற்றோம். ஷுப்மன் கில்லுக்கு இது கேப்டனாக முதல் போட்டி. அதனால் அவர் கொஞ்சம் பதற்றமடைந்திருக்கலாம். ஆனால் அவர் சிறப்பாக பேட் செய்து சதமடித்துள்ளார். நிச்சயம் அவர் மெருகேறுவார். இங்கிலாந்து மண்ணில் அணியை வழிநடத்துவது என்பது ஆழ்கடலில் பிடித்துத் தள்ளிவிடுவது போன்றது. நிச்சயம் அவர் சிறந்த கேப்டனாக வெளியே வருவார்” எனக் கூறியுள்ளார்.