இந்திய அணி இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டதால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இங்கிலாந்து தொடருக்கான அணி அங்கு சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. இது குறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அப்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான கங்குலி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “கடந்த ஓராண்டாக ஸ்ரேயாஸ் நெருக்கடியான காலகட்டத்தில் வெகு சிறப்பாக ஆடிவருகிறார். நானாக இருந்தால் ஃபார்மில் இருக்கும் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்திருப்பேன் எனக் கூறியுள்ளார்.