இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.
ஆனால் அதன் பிறகு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மங்குதிசை நோக்கி சென்றது. பின்னர் 2008 ஆம் ஆண்டு அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார். தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனராக உள்ளார்.
இதற்கிடையில் அவரின் பயோபிக்கை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கங்குலி தற்போது நடிகராக அறிமுகமாகியுள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கும் காக்கி- தி பெங்கால் சாப்டர் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் கங்குலி. அவர் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் படக்குழு வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த தொடர் நாளை மறுநாள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.