இந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ, வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்றுதான் வெளிநாட்டு தொடர்களின் போது குடும்பத்தினர் வீரர்களுடன் தங்குவது சம்மந்தமான கட்டுப்பாடு. குடும்பத்தினர் வீரர்களோடு இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க முடியும் என்று கட்டுப்பாட்டை விதித்தது.
இதற்கு வீரர்கள் வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டாலும் கோலி உள்ளிட்டவர்கள் அதிருப்தியை வெளியிட்டனர். கோலி டெஸ்ட் போட்டிகளில் சமீபத்தில் ஓய்வு பெற்றதற்கு பிசிசிஐயின் இந்த முடிவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து தொடர் நடந்து வரும் நிலையில் இது குறித்து கௌதம் கம்பீர் பேசியுள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அதில் “குடும்பம் முக்கியம்தான். ஆனால் நீங்கள் வந்திருக்கும் காரணம் அதுவல்ல. இது ஒன்று விடுமுறைக் கொண்டாட்டம் அல்ல. ஓய்வறையில் உள்ள ஒரு சில நபர்களுக்குதான் ஒரு நாட்டையே பெருமைப்படவைக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது” என காட்டமாகப் பதிலளித்துள்ளார்.