Publish Date: Fri, 29 Mar 2024 (07:35 IST)
Updated Date: Fri, 29 Mar 2024 (07:45 IST)
நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் ரன்களைக் குவிக்கமுடியாமல் அடுத்தடுத்து முன்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ரியான் பராக் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது.
இந்த இலக்கைத் துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.
இந்த போட்டியில் டெல்லி அணி பேட் செய்யும் போது இம்பேக்ட் ப்ளேயராக ரோவ்மேன் பாவலைக் களமிறக்குவதாக டெல்லி அணி அறிவித்தது. ஆனால் ஏற்கனவே அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருந்ததால் அவரை இறக்கினால் ஐந்தாவது வெளிநாட்டு வீரராக அவர் இருப்பார் என்பதால் அதற்கு நடுவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், அந்த அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலியும் நான்காவது நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நடுவர்கள் உறுதியாக இருந்ததால் ரோவ்மென் பவல் பேட் செய்ய அனுமதிக்கப்படவில்லை.