இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆண்டர்சன் –சச்சின் தொடரில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டது. முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் விளையாடிய அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
இந்நிலையில் மான்செஸ்டரில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சு துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷெட் நான்காவது போட்டியில் பும்ரா விளையாடுவார் என உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும் என ஆலோசனைக் கூறியுள்ளார். அதில் “நான் தேர்வுக்குழுவில் ஒரு நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பும்ராவை விளையாட வைப்பேன். ஏனென்றால் அடுத்த போட்டி மிகவும் முக்கியமானது. அதில் நாம் தோற்றால் தொடரை இழக்க வேண்டியிருக்கும்.” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.