Publish Date: Fri, 14 Mar 2025 (12:23 IST)
Updated Date: Fri, 14 Mar 2025 (12:25 IST)
இந்திய அணியில் தோனிக்குப் பிறகு ஆதிக்கம் செலுத்தும் ஒரு கேப்டனாக கோலி இருந்தார். அவர் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை அடுக்கடுக்காக பெற்றது. ஆனால் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பதுதான் சோகம். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு தற்போது வீரராக மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன்னர் வைத்தார். அதில் “கோலிக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் அணியில் இருக்க முடியாது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் அம்பாத்தி ராயுடுதான். அவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவார் என அனைவருமே எதிர்பார்த்தோம். அவருக்கு ஜெர்ஸி , உபகரணங்கள் எல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் கோலிக்கு அவரைப் பிடிக்காததால் அவரை அணியில் எடுக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இது அநியாயம்” எனக் கூறியிருந்தார்.
தற்போது உத்தப்பாவின் இந்த கருத்தை மறுத்துள்ளார் அம்பாத்தி ராயுடு. இதுபற்றி பேசியுள்ள அவர் ”உத்தப்பா வெளிப்படுத்த விரும்பியது கோலிக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு என்பதைதான். ஆனால் கோலியால் என்னுடைய இடம் பறிபோகவில்லை. அவர் கேப்டன்சியில்தான் நான் அதிகமாக விளையாடினேன். அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். அதனால் எப்போதும் கோலி என்னை நீக்கியதாக நான் சொல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.