17 ஆண்டுகளாக ஆர் சி பி அணியும் அதன் ரசிகர்களும் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த ஐபிஎல் கோப்பை, கைக்கெட்டும் தொலைவுக்கு இந்த முறை வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரைக் கோப்பையே வெல்லாத அணி என்றாலும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது ஆர் சி பி.
இதற்கு முன்னர் 3 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அந்த அணி சென்றுள்ளது. 10 முறை ப்ளே ஆஃப் சுற்றுகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் கோப்பைக் கனவு பலிக்கவில்லை. இதை வைத்தே மற்ற அணி ரசிகர்கள் ஆர்சிபி அணியைக் கலாய்ப்பதும் உண்டு. ஆர் சி பி அணியின் ஸ்லோகனான ஈ சாலா கப் நம்தே (இந்த முறை கோப்பை நமக்குதான்) என்பதை வைத்து அதிகமாக அந்த அணி கேலி செய்யப்படுவதுண்டு.
ஆனால் இந்த ஆண்டு அந்த வாக்கியத்தை அவர்கள் எங்குமே பயன்படுத்தவில்லை. இதுபற்றி பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் “ஆர் சி பி அணியின் நேரம் வந்துவிட்டது. ஆர் சி பி இத்தனை தூரம் முன்னேறிவிட்டது. ஆனால் நான் ஈ சாலா கப் நம்தே என்பதை சொல்ல கோலி என்னை அனுமதிக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் முழுமை அடைவோம்.” எனக் கூறியுள்ளார்.