இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் தலைமையில் வென்று கொடுத்துள்ளார். இந்த பெருமையைப் பெறும் ஒரே இந்தியக் கேப்டன் தோனி மட்டுமே. இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமானார் தோனி. அந்த தொடரில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்து பாகிஸ்தானுடன் நடந்த தொடரில் இரண்டாவது போட்டியில் சதமடித்து தன்னை கிரிக்கெட் உலகுக்கு அறிவித்தார். அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி இந்திய அணியில் கவனிக்கப்படும் வீரராக உருவானார்.
2007 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேற அதன் பின்னர் நடந்த டி 20 உலகக் கோப்பையில் சீனியர் வீரர்கள் விலகிவிட, அதற்கு முன்னர் எந்தவொரு போட்டியிலும் கேப்டன்சி அனுபவம் இல்லாத தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த தொடரில் கோப்பையை வென்று அசத்தியது தோனி தலைமையிலான அணி. அன்றிலிருந்து தொடங்கியதுதான் தோனி கேப்டன்சியின் பொற்காலம். அதன் பிறகு 50 ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட்டில் அவர் தலைமையில் நம்பர் 1 அணி என்ற பெருமை, சாம்பியன்ஸ் கோப்பை பட்டம் என தோனி தொட்டதெல்லாம் பொன்தான். தோனி தலைமையிலான இளம் இந்திய அணி டி 20 உலகக்கோப்பை 18 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் கையிலேந்தியது. அதைக் குறிப்பிட்டு தோனியின் புகழ் சமூகவலைதளம் முழுவதும் பாடப்பட்டு வருகிறது.