Publish Date: Sun, 21 Jun 2020 (08:39 IST)
Updated Date: Sun, 21 Jun 2020 (08:40 IST)
நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட பிறகு அவரது ரசிகர்கள் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அவரது தற்கொலை இந்தியா முழுவதும் பரவலான விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில் சுஷாந்தின் மரண செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் மூன்று பேர் அடுத்தடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டதாக மும்பை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் படி ஒடிசாவின் கட்டாக்கில் 14 வயது சிறுமி ஒருவரும், அந்தமான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரும் கடந்த ஒரு வாரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சுஷாந்தின் மரண செய்தி கேட்டதில் இருந்து மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் போலிஸார் வேறு கோணங்களிலும் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.