Publish Date: Tue, 25 Jun 2019 (10:19 IST)
Updated Date: Tue, 25 Jun 2019 (10:22 IST)
நெதர்லாந்து நாட்டில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஏதோவொரு பகுதி என்றில்லாமல் பரவலாக நாடெங்கும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
முதலில் நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்தது. அதன் பிறகு இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால், நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அந்நிறுவனத்தினர்.
தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் போலீஸார் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர தேவைக்கு தொலைத்தொடர்பை சார்ந்து இருக்காமல் நேரடியாக காவல் நிலையம், மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர் அதிகாரிகள்.