Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் பாதி மீண்டும் சாதாரண ரயில் பெட்டிகளாக மாற்றம்

கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் பாதி மீண்டும் சாதாரண ரயில் பெட்டிகளாக மாற்றம்
, ஞாயிறு, 24 மே 2020 (14:48 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்

தி ஹிண்டு : கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் பாதி மீண்டும் ரயில் பெட்டியாக மாற்றம்

கொரோனா வார்டாக மாற்றப்பட்ட சுமார் 5 ஆயிரம் ரயில் பெட்டிகள் சும்மாவே இருப்பதால் அவற்றில் பாதி மீண்டும் ரயில் பெட்டியாக மாற்றப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் ஷ்ரமிக் ரயில்களாக பயன்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்தார்.

இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக வரும் 10 நாள்களில் 2,600 ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டபோது அவர் இந்த தகவலையும் தெரிவித்தார்.

இந்த 2,600 சிறப்ப ரயில்கள் குறித்த அறிவிப்பை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ள ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு, கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மீண்டும் ரயில் பெட்டிகளாகவே மாற்றுவது குறித்த அறிவிப்பையும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்த 2,600 ரயில்கள் மூலம் 35 லட்சம் பயணிகள் பயன்பெறுவார்கள் என்றும் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

மே 1ம் தேதி முதல் இதைப் போலவே 2,600 ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 35 லட்சம் தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறிய யாதவ், தேவை இருக்கும்வரை இத்தகைய ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை இயக்கப்பட்ட 2,600 ரயில்களில் 1,246 ரயில்கள் (அதாவது 48.5 சதவீதம் ரயில்கள்) உத்தரப்பிரதேசத்துக்கும், 804 ரயில்கள் (அதாவது 31.3 சதவீதம்) பிகாருக்கும் சென்று சேர்ந்தன என்று ரயில்வே வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்காக இடம் பெயர்ந்துள்ளார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் மத்திய உள்துறை இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவத்சவா. ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் தவிர, 40 லட்சம் தொழிலாளர்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் பயணித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினகரன்: ஆளும்கட்சி எம்.எல்.ஏ. பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி செய்தி வெளியிட்ட நிருபர் கட்டிவந்த வீடு இடிப்பு
webdunia

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. கொரோனா முடக்க நிலை விதிகளை மீறி 500 பேருடன் ஆடம்பரமாக பிறந்த நாள் கொண்டாடியது குறித்த செய்தியை வெளியிட்ட டி.வி. நிருபர் ஒருவர் கட்டிக்கொண்டிருந்த வீடு உள்ளாட்சி அமைப்பு மூலம் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினகரன் நாளிதழ்.

திருமலையில் இருந்து எழுதப்பட்டதாக குறிப்பிடப்படும் அந்த செய்தியில் மேலும் உள்ள தகவல்கள்: நாராயணகட் தொகுதி டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. பூபால் கடந்த மாதம் 7-ம் தேதி முடக்க நிலை கட்டுப்பாடுகளை மீறி பலருக்கும் அழைப்பு விடுத்து தனியார் அரங்கில் 500க்கு மேற்பட்டோர் புடை சூழ 60 கிலோ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் என்றும் இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததோடு யாரும் முக கவசமும் அணியவில்லை என்றும் குறிப்பிடும் இந்த செய்தி, அது குறித்து தெலுங்கு டிவி ஒன்றின் செய்தியாளர் பூபால் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டார் என்றும் குறிப்பிடுகிறது

இதன் பிறகு எம்.எல்.ஏ. மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது என்றும், இந்த வழக்கில் அன்மையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டது என்றும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் அந்த நிருபர் கட்டி வந்த வீட்டை முன் அறிவிப்பு ஏதுமின்றி புல்டோசர் உதவியுடன் நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியதாகவும் குறிப்பிடுகிறது. "இதற்காக நகராட்சி நிர்வாகத்திற்கு அழுத்தம் தரப்பட்டதாம்" என்று உறுதியற்ற ஒரு தகவலையும் இந்த செய்தி குறிப்பிடுகிறது. எதற்காக இந்த கட்டுமானம் இடிக்கப்பட்டது என்பது குறித்து நகராட்சி அதிகாரிகளின் விளக்கம் ஏதும் இந்த செய்தியில் இடம் பெறவில்லை.

சன்டே எக்ஸ்பிரஸ்: சீனாவைத் தொடர்ந்து லடாக்கில் ராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா 5 ஆயிரம் ராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு ரெஜிமென்ட்டை கொண்டுவந்ததை அடுத்து லடாக்கில் தமது பக்கத்தில், கிழக்கு லடாக்கில் கூடுதல் ராணுவ வீரர்களை குவித்தது இந்தியா என்று செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பான சன்டே எக்ஸ்பிரஸ்

சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி தமது மூத்த கர்னல் ஒருவர் தலைமையில் ராணுவ வீரர்களை எல்லைப்புறத்துக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, சீனா அதிகரித்துக்கொண்ட பலத்துக்குப் பொருந்தும் வகையில் இந்தியாவும் தமது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டதாக ராணுவத்தில் நடக்கும் இந்த தகவல்களைத் தெரிந்த ஒருவர் கூறியதாக சன்டே எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.

சீன ராணுவத்தின் கர்னல் பதவி என்பது, இந்திய ராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு இணையானது.

ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே லடாக் சென்று நிலைமையை கண்காணித்து திரும்பிய பிறகு கூடுதல் துருப்புகளை அங்கு குவிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா அறிகுறி: தாலி கட்டியதும் தனிப்படுத்தப்பட்டார்