Publish Date: Mon, 21 May 2018 (11:08 IST)
Updated Date: Mon, 21 May 2018 (11:14 IST)
உடல் உபாதைகள் குறித்து பேசும் போதெல்லாம் சரியான நேரத்தில் உணவு உண்ணுதல் குறித்தும் அறிவுருத்தப்படுகிறது. நாம் அனைவரும் சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா ? உணவு பழக்கத்திற்கும் நமது உடல் எடை கூடுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?அதை பற்றி விவாதிக்கிறது இந்த கட்டுரை:
அரசனை போல காலை உணவை உண்ணுங்கள்:
ஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
உடல் எடையை குறைக்க விரும்பும், முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக் கொள்ளும் போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதே நேரம் காலை உணவை தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது அதாவது உடல் உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டசத்து அறிவியல் துறையின் வரிவுரையாளர் கெர்டா ஒரு பழைய சொல்லாடலை மேற்கோள் காட்டுகிறார். "காலை உணவை அரசனை போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனை போலவும், இரவு உணவுவை ஏழையை போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்" என்கிறார் அவர்.
நாம் என்ன உண்கிறோம் என்பதைவிட எப்போது உண்கிறோம் என்பதும் மிக முக்கியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சர்ரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜொனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை தள்ளிபோடுவது உடல் இயக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.
பத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜொனாதன் கண்டறிந்துள்ளார்.
உணவு உண்பது குறித்து பல கேள்விகள் உள்ளன.
அந்த கேள்விகளில் முதன்மையானது எப்போது உண்ண வேண்டும்? எப்போது உண்ண கூடாது? என்பதுதான்.
க்ரோனோ ஊட்டசத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டோன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்கிறார்.