Publish Date: Mon, 11 May 2020 (10:02 IST)
Updated Date: Mon, 11 May 2020 (10:05 IST)
ஜெர்மனியில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், அங்கு கட்டுக்குள் வந்ததாக நம்பப்பட்ட நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒரு நபரின் மூலம் அந்த நோய்த்தொற்று தற்போது ஒருவருக்கு மேல் பரவுவதாக ராபர்ட் கோச் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது
.
அதாவது, ஜெர்மனியில் கொரோனா வைரஸின் பாதிப்பு மீண்டும் எழுச்சியடைய ஆரம்பித்துள்ளது என்று அர்த்தம்.
பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை முழுவதுமாக நீக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நாடு முழுவதும் விரிவான முடக்கநிலை தளர்வுகள் குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் வெளியிட்டார்.
இதன்படி, ஜெர்மனி முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டன. மேலும், ஜெர்மனியின் பிரபல கால்பந்து தொடர் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய நிலவரப்படி, ஜெர்மனியில் 1,69,218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7,395 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.