Publish Date: Sat, 21 Apr 2018 (13:03 IST)
Updated Date: Sat, 21 Apr 2018 (13:08 IST)
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நியாயமானதா? அரசியல் உள்நோக்கத்துடன், நீதித்துறை மீது களங்கம் கற்பிக்கும் செயலா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
''மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்த போதே இவர் நியாயமற்றவர் என்ற உண்மை தெரிந்துவிட்டது. இவரது பல தீர்ப்புக்கள் விமர்சனத்துக்கு வந்துவிட்டது. எனவே நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற இவர் பதவி விலகுவதே நல்லது'' என கருணாகரன் சீதாராமன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
''ஏற்கனவே உச்சநீதி மன்றத்தின் சக நீதிபதிகளின் குற்றச்சாட்டைத்தான் எதிர்க்கட்சிகளும் முன் வைக்கின்றன. ஏழைகளின் ஒரே கடைசி நம்பிக்கையான நீதிபதியின் நம்பிக்கை கேள்விக்குறியானால், எங்கே போவார்கள்?'' என சரோஜா பாலசுப்ரமணியன் எனும் நேயர் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
சுரேஷ் தனது பதிவில் ''நாட்டிலேயே முதன் முறையாக தலைமை நீதிபதிகள் ஊடகத்தை சந்தித்ததும் இதைகொண்டு வர எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்ந்த தீர்மானம்'' என எழுதியுள்ளார்.
''நீதித்துறை மீதிருந்த நம்பிக்கை முழுதுமாக தகர்வதற்குள் நல்ல முடிவு எடுங்கள்'' என கனகராஜன் ராமய்யன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சுப்புலட்சுமி இப்படி எழுதியுள்ளார் ''ஏற்கனவே அவர் பேரில் நம்பிக்கையில்லாத மாதிரி சில விஷயங்கள் நடந்தன. நீதிபதி என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதை மாற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கொண்டு வருவதற்காகவாவது இது அவசியம்''
''அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே,மேலிடத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், குறிப்பிட்ட வழக்குககள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்களே! அதனாலேயே எதிர்கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இது வரவேற்க்கதக்கது!'' என அஜித் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.