Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தான்: ஒரு பெட்டியோடு மட்டுமே வரலாம் - கையில் கொஞ்ச சுமையோடும், நெஞ்சில் வலியோடும் வெளியேறும் ஆஃப்கானியர்கள்

ஆப்கானிஸ்தான்: ஒரு பெட்டியோடு மட்டுமே வரலாம் - கையில் கொஞ்ச சுமையோடும், நெஞ்சில் வலியோடும் வெளியேறும் ஆஃப்கானியர்கள்
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:48 IST)
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தீவிரத்தன்மை, அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்கிற அவசரம், அங்கு சூழ்ந்திருக்கும் இருள் எல்லாமே தெரிகிறது. திரும்பும் திசை எங்கும் அமெரிக்கா மற்றும் பல நாட்டு சாம்பல் நிற ராணுவ விமானங்களே தென்படுகின்றன. வானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
 
ஒவ்வொரு விமானத்தைத் தொடர்ந்தும் பல நீண்ட வரிசைகளில் ஆஃப்கானியகளின் காத்திருக்கிறார்கள். அந்த மக்கள் வரிசைகள் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை முடிவதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களோடு ஒரே ஒரு பெட்டியையும், அணிந்திருக்கும் ஆடையோடு மட்டும் வரலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.
 
அவர்கள் தாலிபன்கள் ஆளும் தங்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் நாட்டை மட்டும் விட்டுச் செல்லவில்லை, அவர்கள் வாழ்ந்த வாழ்கையையும், படித்த இளைய சமுதாயம் கட்டமைத்த வாழ்கையையும், அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக போற்றிப் பாதுகாத்து வைத்திருந்த கனவுகளையும் விட்டுச் செல்கிறார்கள்.
 
அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் காபூல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க சுமார் 14,000 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதில் செய்தியாளர் பிலால் சார்வாரியும் ஒருவர். அவர் இதுவரை கடின உழைப்பில் ஆஃப்கானில் கட்டமைத்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சில ஜோடி துணிகள் மட்டும் எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தோடு காபூல் விமான நிலையம் வந்திருக்கிறார்.
 
பிலால் சார்வாரி பிபிசியில் பணியாற்றிய முன்னாள் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சோலா (சோலா என்றால் அமைதி என்று பொருள்) எனப் பெயரிட்டு இருக்கும் தன் மகளை ஆப்கானிஸ்தானிலேயே வளர்க்க நினைத்தார். அவர் ஆப்கானில் தான் கடந்த 20 ஆண்டுகள் செய்தியாளராக பணியாற்றினார்.
 
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை ஒரு நாள் தன் மகள் புரிந்து கொள்வார் என நம்புகிறார் பிலால்.
 
"இன்று ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு தலைமுறையே தங்களின் கனவுகளையும், விருப்பங்களையும், வாழ்கையையும் புதைத்துவிட்டார்கள்" என கூறுகிறார் பிலால்.
 
"இந்த நகரம் தான் எங்கள் வீடு, என்ன தான் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் அதை நாங்கள் வீடு என்று தான் அழைத்தோம். நாங்கள் இங்கு தான் வளர்க்கப்பட்டோம். தாலிபன்கள் தங்களின் கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம்... நாங்கள் டாங்கிகள் மற்றும் குண்டுகளிலிருந்து விலகிச் செல்ல முடியும் என்பதை நிரூபிக்க முடியும்"
 
அமெரிக்காவின் கணக்குப் படி, கடந்த வாரம் 17,000 பேர் காபூல் விமான நிலையம் வழியாக 17,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். அதில் எத்தனை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சர்வதேச அரசாங்கங்களோடும் , அமைப்புகளோடும் பணி புரிந்ததால் விசாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
 
பல சிக்கல்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கானியர்களில் பலரும் தொழில் வல்லுநர்கள், படித்த பட்டதாரிகள். இப்படிப்பட்ட அறிவுசார் சமூகம் ஆப்கானிக்ஸ்தானைக் விட்டு வெளியேறுவது நாட்டைக் பாதிக்கும். ஆப்கானில் நல்லவர்கள் மரத்தில் காய்க்கமாட்டார்கள். என்கிறார் பிலால்.
 
காபுல் விமான நிலையத்துக்கு வெளியே மற்றொரு 10,000 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் விமான நிலையத்துக்குள் நுழைய காத்திருக்கிறார்கள். ஒரு மக்கள் கூட்டம் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறது.
webdunia
நேரம் ஆக ஆக, மக்களிடம் தப்பிக்க வேண்டும் என்கிற எத்தனிப்பு அதிகரிக்கிறது. கடந்த சனிக்கிழமை தான் மிகவும் மோசமான நாள் என வர்ணிக்கிறார்கள் செய்தியாளர்கள். காரணம் மக்கள் கூட்டம் அலையாக மோதி முன்னேறியதால் சில பெண்கள் உயிரிழந்துவிட்டனர்.
 
நேட்டோவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வார காலத்துக்குள், தாலிபன்கள் நகரத்திற்குள் நுழைந்ததிலிருந்து விமான நிலையத்திலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் குறைந்தது 20 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் மேலே குறிப்பிட்டவர்களும் அடக்கம்.
 
ஞாயிற்றுக்கிழமை வாயில்கள் அமைதியாக இருப்பதாக கூறப்பட்டது, தாலிபன் போராளிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், தடியடி நடத்தி மக்களை வரிசையில் நிற்க வைத்ததாகவும் ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
 
இந்த மாத இறுதிக்குள் தங்கள் நாட்டு குடிமக்களையும், தங்களுக்காக தங்களுடன் பணியாற்றிய ஆப்கன் நாட்டு மக்களையும் மீட்க முடியுமா? என்கிற கவலையும் சர்வதேச அளவில் நிலவுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாத இறுதியோடு அமெரிக்கா தன் முழு படைகளையும் பின்வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த ஒன்பது நாட்களில் பலரை வெளியேற்றுவது "கணித ரீதியாக சாத்தியமற்றது" என கடந்த சனிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் எச்சரித்தார்.
 
பிலால் சர்வாரியைப் பொறுத்தவரை, அவர் வெளியேறுவதால், அவர் எல்லாவற்றையும் கைவிடத் தயாராக இருக்கிறார் என்று பொருளல்ல என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
 
"ஆப்கானிஸ்தானுடனான எங்கள் அன்பு அபாயகரமானது, என்ன நடந்தாலும் நாங்கள் அதை ஒருபோதும் கைவிட மாட்டோம்," என்று அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!