தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை. 20,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் தலைநகர் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் திடல் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கான நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த முகாமில் மட்டும் சுமார் 3,000 பேர் தங்கள் குடும்பங்களுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மீட்பு படையினருடன் இணைந்து இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உணவு, பால், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்தியா சார்பில் 21 டன் நிவாரண பொருட்கள் மற்றும் 80 தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் அவசர கால கருவிகளுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.