Publish Date: Wed, 24 Aug 2016 (11:00 IST)
Updated Date: Wed, 24 Aug 2016 (11:08 IST)
இலியானா இப்போது தமிழ், தெலுங்கில் நடிப்பதில்லை. வருடத்துக்கு ஒரு படம் என்றாலும் இந்திதான். அதிரடியான கருத்துகள் சொல்வதில் இலியானா என்றும் தயக்கம் காட்டியதில்லை.
தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை பேட்டியில் தெரியப்படுத்தியுள்ளார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை துளியும் இன்றி தனது கருத்தில் நிலைத்து நிற்கும் இலியானாவின் பேட்டி...
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறப்படுவது உண்மையா?
கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும் இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. என்னை பொருத்தவரை, பெரிய சக்தி ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. இதை வைத்து நான் மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரானவள் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு காலத்தில் எனக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது.
இப்போது கடவுள் நம்பிக்கை இல்லை.
ஏன்...?
இயற்கையை மீறிய சக்தி ஒன்று உலகத்தில் இல்லை. ஆனால் எனக்கு ஆற்றல்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நேர்மறை ஆற்றல்களும் எதிர்மறை ஆற்றல்களும் மனிதர்களுக்குள் கலந்து இருக்கின்றன. அவைதான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. நேர்மறை ஆற்றல்கள் நல்லவற்றையும் எதிர்மறை ஆற்றல்கள் துன்பத்தையும் கொடுக்கின்றன.
உங்கள் வீட்டில் இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?
எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் எனது பெற்றோர் கடவுளை நம்புகிறார்கள். அவர்கள் கடவுளை நம்புவதும், நான் நம்பாததும் எங்களுக்குள் ஒரு பிரச்சனையாக இல்லை.
ரஷ்டம் படத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் படங்களில் நடிக்காமல் இருந்தபோது சில டைரக்டர்கள் என்னை அணுகி கதைகள் சொன்னார்கள். அந்த கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. காத்திருப்புக்கு பலனாக அக்ஷய்குமாருடன் ரஷ்டம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. நான் காத்திருந்தது சரிதான் என்று எண்ணுகிறேன்.
அவ்வப்போதுதானே படங்களில் நடிக்கிறீர்கள்?
ஆமாம். கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். நடிகர், நடிகைகளுக்கு இதுபோன்ற இடைவெளி அவசியம்தான்.
கதைகள் பிடிக்காமல் போவதால்தான் நான் தொடர்ந்து நடிப்பதில்லை. பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறேன்.
இது சரி என்று நினைக்கிறீர்களா?
நான் அதிர்ஷ்டசாலி. எல்லா நேரமும் எனக்கு நல்ல விஷயங்களே நடந்து இருக்கின்றன.