சிதம்பரம் தில்லை ஸ்ரீ நடராஜர்
-கா. அய்யநாதன், புகைப்படங்கள்: சீனி
Publish Date: Mon, 07 Jul 2008 (14:40 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
“தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்ஆட எடுத்திட்ட பாதம் அன்றோநம்மை ஆட்கொண்டதே”என்று தெய்வ அருள் பெற்ற திருநாவுக்கரசர் பக்திப் பெருக்குடன் பாடித் தொழுத புண்ணியத் திருத்தலம் தில்லையம்பலம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்.மொழிகள் அனைத்திற்கும் மூலம் ஒலியே. அதுபோல் இப்பிரபஞ்சத்தின் மூலமாய் இருப்பது ஓம் எனும் பிரணவ மந்திரமே என்றுரைத்து அந்த வடிவாகவே இத்திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானை நினைத்தும், நேரில் கண்டும் வழிபடாத சைவர்கள் எவருமிலர் என்று கூறப்படும் பெருமை பெற்றது இத்திருத்தலம்.சிவபெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் இத்தலம் ஆகாசத்திற்குரியதாகப் போற்றப்படுகிறது. இங்கு தனது பக்தர்களுக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சி தந்ததாகவும் கூறப்படுவதுண்டு. எனவே, இத்திருக்கோயிலையே அக்னி மூலைக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
திருக்கோயிலின் நடுநாயகமாய், அம்பலத்தின் முன்னால், சிவகாம சுந்தரி சமேதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தொழுத பின், இடப்பக்கம் திரும்பினால் கோவிந்தராஜரை வழிபடலாம். ஓரிடத்திலிருந்தே இருவரையும் வழிபடும் பாக்கியத்தை தந்துள்ள திருத்தலம் இது மட்டுமே.
சிவபெருமான் தனது பக்தர்களுக்கு தன்னை வெளிபடுத்திய விந்தையை இங்கு சிதம்பர ரகசியமாக கூறி காட்டுகின்றனர்.
இத்திருக்கோயிலின் தீர்த்தமும், இந்தியா முழுவதிலுமிருந்து வந்து தங்களுடைய நாட்டியத் திறனை வெளிப்படுத்தும் அழகிய நடன மண்டபமும், தூணுக்குத் தூண் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் நமது பாரம்பரியத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.இத்திருக்கோயிலின் நான்கு அழகிய இராஜ கோபுரங்களும், கோயிலிற்குள்ளிருக்கும் தூண்களும் சிற்பக் கலையின் அழியாத அழகுடன் இன்றளவும் உள்ளன. தில்லையம்பலத்தார் நாட்டிய கோலத்தில் நின்று அருள்பாலிக்கும் இத்திருக்கோயிலின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள நடன சிற்பங்கள், பரத நாட்டியத்தின் நுணுக்கங்களை துல்லியமாக கற்றுத்தரும் பாடங்களாக உள்ளன. நடனக் கலையை வெளிப்படுத்தும் சிற்பக் கலையும், ஆன்மிகமும் ஒன்றிணைந்து மனங்கமழும் அற்புத திருத்தலம் தில்லை நடராஜர் திருக்கோயில்.
இக்கோயிலிற்குச் செல்வோர் அதிகாலையில் (அல்லது மாலை நடை திறக்கும்போது) சென்று மதியம் வரை இருந்து கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து ரசித்துக் களிக்கவேண்டும்.
எப்படிச் செல்வது:
இரயில் மார்க்கமாக: சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தடத்தில் சிதம்பரம் உள்ளது.
சாலை மார்க்கமாக: சென்னையிலிருந்து 245 கி.மீ. தூரத்திலுள்ளது சிதம்பரம். பேருந்து அல்லது வாகனத்தின் மூலம் 4 முதல் 5 மணி நேரம் பயணம் செய்து இத்திருத்தலத்தை அடையலாம்.
வான் மார்க்கமாக: அருகிலுள்ள விமான நிலையம் சென்னை. அங்கிருந்து சாலை அல்லது இரயில் வாயிலாக சிதம்பரம் செல்ல வேண்டும்.