Publish Date: Sun, 01 Jun 2008 (16:35 IST)
Updated Date: Sun, 01 Jun 2008 (16:26 IST)
விகாச மாதம் மூன்றாம் நாள் அக்ஷய திருதியை அன்று சிம்மாச்சல மலையில் பக்தர்கள் குந்தனர். ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி சந்தனத்தினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். கடவுளின் முழுமையான வடிவத்தை அன்று மட்டுமே காண முடியும். உலகில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களில் சிம்மாச்சல ஷேத்ரமும் ஒன்று. சிம்மாச்சலம் என்ற சொல்லிற்கு சிங்கத்தின் மலை என்று பொருள். கடவுள் விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மனின் மலை இது.
மலை உச்சியில் இருந்து கடலில் தூக்கி எறியப்பட்ட தனது பக்தனான பிரகலாதாவைக் காப்பதற்காக சிம்மாச்சல மலையில் கடவுள் விஷ்ணு தோன்றினார்.
தல வரலாறு!
தன்னைக் காத்த கடவுள் விஷ்ணுவிற்கு கோயில் கட்டினான் பிரகலாதா. நரசிம்மன் கைகளில் தனது தந்தையின் உயிர் போன பிறகுதான் கோயில் பணிகளை அவனால் பூர்த்திசெய்ய முடிந்தது. ஆனால், கிருதா யுகத்தின் இறுதியில் அக்கோயில் கவனிக்காமல் விடப்பட்டு சேதமடைந்தது. கோயிலுள் இருந்த கடவுளும் கவனிப்பாரின்றி மண்ணில் புதையத் துவங்கினார்.
அடுத்துவந்த யுகத்தின் துவக்கத்தில் லூனார் அரச வம்சத்தைச் சேர்ந்த புருரவா என்பவர் இக்கோயிலைக் கண்டறிந்தார். புருரவா தனது மனைவி ஊர்வசியுடன் வான்வழியாக ரதத்தில் வந்தபோது, அதிசயச் சக்தி மூலம் சிம்மாச்சல மலைக்கு இழுத்து வரப்பட்டார். அங்கு மண்ணிற்குள் புதைந்து கிடந்த கடவுளின் சிலையை அவர் கண்டார்.
அப்போது வானில் தோன்றிய அசரீரி, கடவுள் வெளியில் தெரியாதவண்ணம் சந்தனத்தால் மறைத்து வழிபடுமாறு கட்டளையிட்டது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே அதாவது விகாச மாதம் மூன்றாவது நாள் கடவுளின் நிஜ உருவத்தை வழிபட வேண்டும் என்றும் அது கூறியது. அசரீரியின் கட்டளைப்படி, கடவுளின் சிலையிலிருந்து நீக்கப்பட்ட மண்ணின் அளவிற்குச் சந்தனம் தயாரித்து கடவுளை மூடியதுடன், கோயிலையும் புதிதாகக் கட்டினான் புருரவா. அன்றுமுதல் அசரீரியின் கட்டளைப்படி வழிபாடு நடந்து வருகிறது. சிம்மாச்சல மலையில் ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி வீற்றிருக்கிறார். கோயிலின் முக்கியத்துவம்!ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வடக்காக 16 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிம்மாச்சலம் உலகிலேயே மிகவும் பழமையான கோயில். மலையின் வடக்கு உச்சிக்கு அருகில் சரிவான நிலப்பரப்பில் அமைந்துள்ள நரசிம்மன் கோயிலால்தான் இம்மலைக்குச் சிம்மாச்சலம் என்று பெயர் வந்தது. கோயிலிற்குச் செல்லும் வழிநெடுக மா, பழா, அன்னாச்சி உள்ளிட்ட பழ மரங்கள் நிறைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கல் படிகளைக் கடந்துவரும் பக்தர்களுக்கு இம்மரங்கள் புத்துணர்வு அளிக்கின்றன. படிகள் தகுந்த இடைவெளியுடன் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையும், வழிபாட்டிற்குரிய பிற மாதங்களிலும் பக்தர்களின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கிறது.
எப்படி அடைவது!
சாலை மார்க்கமாக: விஜயவாடாவில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹைதராபாத்தில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலும் விசாகப்பட்டினம் அமைந்துள்ளது. ஹைதராபாத், விஜயவாடா, புவனேஷ்வர், சென்னை, திருப்பதி ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
ரயில் மார்க்கமாக: சென்னை- கொல்கட்டா ரயில் மார்க்கத்தில் விசாகப்பட்டினம் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகும். புது டெல்லி, சென்னை, கொல்கட்டா, ஹைதராபாத் நகரங்களில் இருந்து நாள்தோறும் விரைவு ரயில் போக்குவரத்து உண்டு.
விமான மார்க்கமாக: ஹைதராபாத்தில் இருந்து தினமும், சென்னை, புது டெல்லி, கொல்கத்தா நகரங்களில் இருந்து வாரத்திற்கு மூன்று முறையும் விமானப் போக்குவரத்து உள்ளது.