விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!
Publish Date: Sat, 29 Sep 2007 (16:43 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:12 IST)
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்து இளம்பிறை போல் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
விநாயகர் சதுர்த்தியை சனிக்கிழமை முதல் நாடெங்கும் கொண்டாடி வருகின்றோம். விநாயகப் பெருமானின் இப்பிறந்தநாள் விழாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள புகழ்பெற்ற கஜரானா திருக்கோயிலிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். 1735 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் மிகுந்த புனிதத் தன்மையுடையது. கஜரானா கோயிலின் பூசாரியாக இருந்த மங்கள்நாத் என்பவர் ஒரு கனவு கண்டார். அவருடைய கனவில் வந்த விநாயகர், தான் புதைந்துள்ளதாகவும், தன்னை தோண்டி வெளிக்கொணருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அகில்யா ராணியின் அரண்மனைக்குச் சென்ற மங்கள்நாத், தான் கண்ட கனவை மகாராணியிடம் சொல்ல, அவர் அங்குள்ள கிணற்றைத் தோண்டுமாறு உத்தரவிட்டார். கிணற்றைத் தோண்டியதில் விநாயகரின் திருவுருவச் சிலை கிடைத்தது. அதுவே கஜரானா கோயிலில் நிறுவப்பட்டு இன்றளவும் வழிபாடு நடந்து வருகிறது.
கஜரானா திருக்கோயிலில் விநாயகரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டதற்குப் பிறகு அத்திருக்கோயிலிற்கு பெருமையும், புகழும் அதிகரித்தது. இக்கோயிலிற்கு வந்து விநாயகரை பிரார்த்திக்கும் பக்தர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதாக நம்பப்படுகிறது. தனது எதிர்பார்ப்புகளைச் சொல்லி அங்கு கயிறு ஒன்றை கட்டிவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு செய்த பின், தாங்கள் நினைத்து நிறைவேறியது என்று பலரும் கூறுகின்றனர். தங்களுடைய எண்ணம் நிறைவேறியதும், அந்தக் கயிற்றை அவிழ்த்துவிடுகின்றனர்.
இக்கோயில் மிக அழகானதாகவும், பிரம்மாண்டத் தோற்றம் கொண்டதாகவும் உள்ளது. கணபதியே இங்குள்ள முக்கிய தெய்வமாகும். கணேசர் மட்டுமின்றி, 33 கடவுள்களுக்கும் தனித்தனி ஆலயங்கள் இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ளது. சிவபெருமானுக்கும், துர்கைக்கும் இங்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளது. இக்கோயிலில் அரச மரம் ஒன்றும் உள்ளது. இக்கோயிலின் தலவிருட்சமான அரச மரத்தை சுற்றி வருவதால் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அதனால் இத்தலவிருட்சத்தை பக்தர்கள் வலம் வருகின்றனர். இம்மரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள் கூடுகட்டி வாழ்வதால் அவைகளின் சத்தத்தால் அந்தச் சூழலிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. சாதி, மத பேதமின்றி இத்தருத்தலத்திற்கு எல்லோரும் வருகின்றனர். சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இத்திருத்தலம் விளங்குகிறது. புதிதாக வாகனங்கள் வாங்குவோர் இங்குதான் அதற்கு முதலில் பூஜை செய்கின்றனர். பிள்ளையார் சதுர்த்தி இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு புதன்கிழமையன்றும் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கணேசருக்கு 11 லட்சம் கொழுக்கட்டைகளை படைக்கின்றனர். இத்திருக்கோயில் மகேஷ் பட் எனும் பூசாரியின் பரம்பரையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கோயில் நிர்வாகப் பொறுப்பை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துவிட்டனர். ஆயினும், பட் குடும்பத்தினர் இன்னமும் கோயிலிற்கு தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
எப்படிச் செல்வது :
மத்தியப் பிரதேச மாநிலத்தின் வணிகத் தலைநகர் என்று போற்றப்படும் இந்தோர் நகரம், ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நகருக்கு சாலை, ரயில், விமானம் மூலம் மிக சாதாரணமாக வரலாம்.
எப்பொழுது செல்லலம் :
விநாயகர் சதுர்த்தியின் போது இக்கோயிலில் உள்ள கணபதிக்கு சிறப்பு நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.