Publish Date: Tue, 08 Jan 2008 (16:38 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (16:35 IST)
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. கிராமங்களில் நடைபெறும் விழாக்கள் எப்பொழுதும் நம் நெஞ்சை விட்டு அகலாதவையாகும். பொதுவாக எல்லா விழாக்களிலும் பெரும் திரளாக பங்கேற்கும் மக்கள், அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதிலும், அங்கு நிகழ்த்தப்படும் கேளிக்கைகளிலும் பங்கேற்பதுமாக இருப்பர். ஆனால், சில விழாக்கள் விதிவிலக்கானவை. அதனாலேயே அவைகள் ஏராளமான மக்களை கவர்கின்றன. இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாங்கள் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகின்றோம். அங்கு விழாவிற்கான அனைத்து அம்சங்களுடன் ஆவிகளும் உலா வருகின்றன. நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால் உண்மை. மராட்டிய மாநிலம் சல்கோவான் மாவட்டத்தில் உள்ள சொராவத் என்ற இடத்தில் இந்த ஆவிகளின் விழா நடைபெறுகிறது. பூதங்கா மேளா என்று அதற்குப் பெயர். அதாவது ஆவிகளின் விழா.
ஒவ்வொரு ஆண்டும் தத்தா ஜெயந்தி அன்று இந்த விழா நடைபெறுகிறது. பேய், பிசாசு போன்ற ஆவி பிடித்தவர்கள் இந்த விழாவை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும், இந்த விழாவில் பங்கேற்றுத் திரும்பும் போது அவர்களை விட்டு அந்த ஆவிகள் விலகிவிடுவதாகவும் இங்குள்ள மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இதுகுறித்து கேள்விபட்டதும் சொராவாத் கிராமத்திற்குச் சென்றோம். போகும் வழியிலேயே நோயாளிகளைப் போல காணப்பட்ட ஓரிருவரை கண்டோம். அவர்களிடம் நாங்கள் பேச முற்பட்டபோது, அவர்களுக்கு ஆவியின் பிடியில் சிக்கியுள்ளதாக அவர்களோடு இருந்தவர்கள் கூறினர். அதனால் இந்த தத்தா விழாவிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினர்.
தத்தா ஜெயந்தி விழாவில் உணவிலிருந்து எல்லா விதமான கேளிக்கைகளும் இருந்தன. ஆனால், அங்கிருந்த மக்களில் பலர் தள்ளாடிக் கொண்டும், தங்களையே துண்புறுத்திக் கொள்பவர்களாகவும் காணப்பட்டனர். ஜன்னி கண்டவர்களைப் போல சிலர் கத்திக் கொண்டிருந்தனர். சிலர் தங்களுக்குத் தாங்களே பேசிக் கொண்டனர். நேரம் ஆக ஆக இவர்களின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு மாதிரியாகக் கத்தத் துவங்கினர். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்த மேடையின் முன் சென்று எல்லோரும் தலையை தாழ்த்தி வணங்கினர். அவ்வாறு வணங்கி எழுந்தபோது அவர்களுடைய விநோதமான நடத்தையில் மாற்றம் தெரிந்தது. சிறிது நேரத்தில் இயல்பாக ஆகிவிட்டனர். அதாவது, அவர்களை பீடித்திருந்த ஆவி விலகிவிட்டதாகக் கூறினர்.
இவ்வாறு ஆவி பிடித்தவர்கள் பலரும் அந்த மேடையில் தொழுது எழுந்த பின்னர் இயல்பான நிலைக்குத் திரும்பியதை நாங்களும் பார்த்துக் கொண்டிருந்தோம். இவ்வாறு பாதிக்கப்பட்டு அங்கு வந்தவர்களில் பெண்களே அதிகம் இருந்தனர். அவர்களிடம் பேசியதில் இருந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இங்கு வருகின்றவர்கள் என்பது தெரிந்தது.
இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான சிகிச்சையும், அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. ஆனால், இங்கு வரும் மக்கள் கடவுளை நம்பினால் போதும் எல்லாம் சரியாகும் என்று நம்புகின்றனர். கடவுளை மட்டுமின்றி, ஆவிகளின் துணையையும் நாடுகின்றனர்.
உங்களால் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா எங்களுக்குத் தெரியபடுத்துங்கள்.
Webdunia
Publish Date: Tue, 08 Jan 2008 (16:38 IST)
Updated Date: Tue, 08 Jan 2008 (16:35 IST)