வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை என்ன?
முனைவர் க.ப. வித்யாதரன்
Publish Date: Mon, 10 Dec 2007 (20:17 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (20:17 IST)
வாஸ்து அறிவியல் பூர்வமானது. சூரியக் கதிர், காற்று ஆகியவை வீட்டிற்குள் நுழையக் கூடிய தன்மை, ஆற்றல் ஆகியவற்றை நெறிப்படுத்துதலே வாஸ்து சாஸ்திரத்தின் குறிக்கோள்.
இயற்கையின் அபரிமிதமான ஆற்றலை, சக்தியை மனித வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முறைப்படுத்திப் பயன்படுத்துவதே வாஸ்து.
நவக்கிரகம் என்று அழைப்பது போல நாம் வாழும் வீட்டையும் கிரகம் என்று கூறுவார்கள். அதனால்தான் புதுமனையில் குடியேறுவதையும் கிரகப்பிரவேசம் என்கிறோம்.
எங்கு சென்று வந்தாலும் ஓய்வெடுப்பதும், வாழ்வதும் வீட்டில்தான். எனவே வீட்டில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கதிர் வீச்சுக்கள் நம்மை தாக்காமல் அவற்றை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கலையே வாஸ்து சாஸ்திரக் கலையாகும். இது ஆயக் கலைகள் 64ல் ஒன்றான ஜோதிடக் கலையில் ஒரு பிரிவாகும்.
நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகும். அதனை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைத்து பயன்படுத்தினோம் என்றால் ஆக்கப்பூர்வமான பலன்கள் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறை அமைத்து, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சமைத்தால் அந்த உணவு அதிக சுவை தரும். வீணாகாது. எளிதில் கெடாது. சமைத்துக் கொண்டிருக்கும்போதே ஸ்டவ் வெடிப்பது, வெந்நீர் காலில் கொட்டிக் கொள்வது போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படாது.
ஜோதிட சாஸ்திரத்தில் தென் கிழக்கு மூலைக்கான கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சுபத் தன்மை பெறாமல், பாவ கிரக சேர்க்கையில் அல்லது வீச்சில் அமைந்திருக்குமானால் அவர்களுக்கு சமையலறை அமையும் திசை மாறுபடும்.
அது அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து முடிவு செய்ய வேண்டும். எனவே வாஸ்துவை அவரவர்களின் ஜாதகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தும்போதுதான் முழுப் பலனை அடைய முடியும்.
சமையலறைக்கு கூறியைதப் போல ஒவ்வொரு விடயத்திலும் ஒருவருடைய மனைக்காரரின் ஜாதகத்தின் அடிப்படையிலேயே வாஸ்து சாஸ்திரத்தை கையாள வேண்டும். அது முக்கியமானது.