ஆணின் கட்டைவிரல் அமைப்பைப் பொறுத்தே மனைவி அமையும் என்பது உண்மையா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
Publish Date: Wed, 31 Dec 2008 (18:21 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (18:09 IST)
கைரேகை சாஸ்திரப்படி கட்டை விரல், அதற்கு கீழ் உள்ள பகுதி சுக்கிரன் மேடு என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சுக்கிரன்தான் களத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது வாழ்க்கைத் துணைக்கு உரிய கிரகம் சுக்கிரன்.
இது கைரேகையும், ஜோதிட சாஸ்திரமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை உணர்த்துவதாக உள்ளதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகிக் கிடக்கிறது என்றால், அவர் உள்ளங்கையில் உள்ள சூரிய மேடு (மோதிர விரலிலுக்கு கீழ் உள்ளது) வலுவிழந்து காணப்படும் அல்லது குறுக்கு ரேகைகள் இருக்கும் அல்லது கரும்புள்ளிகள் காணப்படும்.
சில கிரகங்கள் ராசிக் கட்டங்களில் நன்றாக இருக்கும். ஆனால் நவாம்சத்தில் பலமிழந்து காணப்படும். ஒருவரது ஜாதகத்தில் ராசிக் கட்டங்களில் வலுவாக உள்ள கிரகங்கள், நவாம்சத்தில் வலுவிழந்து காணப்படுவதால், அந்த ஜாதகரின் கைரேகையை ஆராய்வதன் மூலம் உண்மையான நிலையை கண்டறிய முடியும்.
எனவே, என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெரும்பாலானவர்களிடம் (ஜாதகதாரராக இருந்தால்) அவர்களின் கைரேகையையும் நான் பரிசோதிப்பது உண்டு.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை முழுமையாகக் கிடைக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக அவர் முன்னேறுவார். உதாரணமாக, திருமணத்திற்கு முன் அவர் சாதாரண நிலையில்தான் இருந்தார். அவர் மனைவி வந்த யோகம் யாரும் எதிர்பார்க்காத இடத்திற்கு உயர்ந்து விட்டார் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அதற்கு ஒருவரது சுக்கிரன் மேடு சிறப்பாக இருப்பது அவசியம்.
எனவே, ஒருவரது கட்டை விரலின் அமைப்பைப் பொறுத்தே அவருக்கு வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் உண்மை உள்ளது. கட்டை விரலில் என்ன ரேகைகள் உள்ளது குறுக்கு ரேகைகளா, நீளமான ரேகைகளா, வெண் புள்ளிகள் அமைந்துள்ளதா என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.