வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது ஏன்?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்:
Publish Date: Sat, 19 Apr 2008 (12:10 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (12:10 IST)
வழக்கமாக காந்தப் புலன்கள் இருப்பது வடக்கு மற்றும் தெற்கு திசைகளில்தான். அதனால் தான் வட முனை, தென் முனை என்று சொல்லப்படுவது.
வட திசை பொதுவாக நீத்தாருக்கு சடங்கு செய்யும் திசையாக எடுத்துக் கொள்ளப்படும் என சில நூல்கள் சொல்கின்றன. ஆனால், ஆலயத்தில் வடக்கு புறமாக விழுந்து இறைவனை வணங்குவதுதான் முறையானது. ஏனெனில் கோயில்களில் பொதுவாக இறைவன் கிழக்கு நோக்கித்தான் இருப்பார். கொடி மரத்தின் அருகே வடக்கு நோக்கித்தான் விழுந்து கும்பிடுகிறோம். கடவுளின் வாழ்த்தும் கைகளை நோக்கி நாம் விழுவது போன்று அது அமையும்.
கோயில்களில் வடக்கு நோக்கி விழுந்து கும்பிடலாமேத் தவிர, பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. சில மன்னர்கள் கூட ‘வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான்’ என்றெல்லாம் கல்வெட்டுகளில் இருக்கின்றன.
எனவே வடக்கு என்பது வதைக்குரிய திசையாக முன்னோர்கள் நிர்ணயித்தனர். கடும் தவம் இருத்தல் போன்றவைக்கு அந்த திசை உகந்தது. ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு அந்த திசை ஒத்துவராது.
இன்றைக்கும் பல்வேறு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் வடக்கு நோக்கி அமர மாட்டார்கள். கிழக்கு நோக்கித்தான் அமருவார்கள்.
பொதுவாக சூரியன் உதிக்கும் திசை அல்லது மறையும் திசையில் ஏதாவது ஒன்றில் தலை வைத்துப் படுத்தால் சிறந்தது. வடக்கில் தலை வைத்துப் படுத்தால் கவனச் சிதைவு, கனவுத் தொல்லை, தூங்கி எழுந்தாலும் ஓய்வு பெறாத மனநிலையைத் தரும்.
வெளியில் சென்று தங்கும்போதும் இதனைக் கடைபிடிக்க வேண்டுமா?
தேவையில்லை. பெரும்பாலும் நாம் எங்கு நிரந்தரமாக தங்கியிருக்கின்றோமோ அங்கு இதுபோன்ற நல்ல சூழ்நிலை அமைய வேண்டியது அவசியம். ஆனால் நாம் போகும் இடத்தில் எல்லாம் இதனை எதிர்பார்க்க முடியாது.
அதே சமயம், எங்கு படுத்தாலும் கிழக்கு, மேற்கு திசையில் படுக்க முயற்சி செய்யலாம். அப்படி இல்லை என்றால் வடக்கு, தெற்கில் தான் படுக்க வேண்டும் என்றால் அப்படியும் படுக்கலாம்.
வடக்கு திசையில் படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த திசையில் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தை (தலைக்குப் மேல் புறம்) வைத்துக் கொண்டால் காந்தப்புலத்தின் தன்மை கொஞ்சம் குறையும். அதாவது நாம் படுக்கும் இடத்திற்கு தலைக்கு பின்புறம் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Webdunia
Publish Date: Sat, 19 Apr 2008 (12:10 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (12:10 IST)