அஷ்டமி, நவமி திதிகளில் எதையும் செய்யக்கூடாதா? ஏன்?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
Publish Date: Thu, 14 Feb 2008 (17:13 IST)
Updated Date: Thu, 14 Feb 2008 (17:12 IST)
அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது. அன்றைய தினம் வழக்குகள் போடுதல், போர் தொடுத்தல், அதர்வன வேத பிரயோகம் போன்றவற்றில் ஈடுபட்டால் பலனைத் தரும்.
பண்டையக் காலப் போர்கள் எல்லாம் அஷ்டமி, நவமி நாட்களில்தான் தொடங்கும்.
ஈரான் - ஈராக் போர் அஷ்டமி, நவமி நாளில்தான் துவங்கியது. அமெரிக்கா ஈரான் மீது அஷ்டமி நாளில்தான் முதல் ஏவுகணையை வீசியது.
அஷ்டமி நாளில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். முடிவற்று இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். தாக்குதல், பதிலடி தருதல், வீழ்த்துதல், பழி வாங்குதல் போன்ற எண்ணங்கள் அந்த திதிகளில் அதிகரிக்கும்.
அதற்காகத்தான் மூதாதையர் புதிய காரியத்தை அன்றைய தினத்தில் செய்யாமல் இயல்பான பணிகளையேச் செய் என்று சொன்னார்கள்.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பது போன்ற விஷயங்கள் அஷ்டமி, நவமியில் துவங்கினால் ஆகும்.
அஷ்டமி, நவமி நாட்களில் அதர்வன வேதங்களைப் பயன்படுத்தி செய்பவை எல்லாம் வெற்றி பெறும். அதர்வன வேதங்கள் என்றாலே குருதி தொடர்புடையவை. அஷ்டமி, நவமிக்கும் குருதிக்கும் நிறைய தொடர்பு உண்டு. எனவே அன்றைய தினம் குருதி பரிகாரம், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றிற்கும் அன்றைய திதி ஏற்புடையதாகும்.