Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : சிம்மம்!

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : சிம்மம்!
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:07 IST)
FILE
வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

வருட பிறப்பு முதல் ஜுன் 12-ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்துப் போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும்.

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். ஜுன் 21-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.

சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 4-ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகவும் வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறையும் வந்துச் செல்லும். அசதி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்களே! காதல் இனிக்கும். கல்யாணம் கூடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று நல்ல வேலைக் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். பரிசு, பாராட்டுகள் உண்டு.

இந்த 2014-ம் ஆண்டு நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றுவதுடன், மன அமைதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

தஞ்சாவூர்-கண்டியூருக்கு அருகிலுள்ள திருச்சோற்றுத்துறை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசோற்றுத்துறை ஈசனையும், அம்பாள் ஸ்ரீஅன்னபூரணியையும் உத்திராடம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் அல்லது அமாவாசை திதி நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.


Share this Story:

Follow Webdunia tamil