Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌‌சி பல‌ன் : கன்னி

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌‌சி பல‌ன் : கன்னி
, திங்கள், 19 டிசம்பர் 2011 (14:04 IST)
மனிதநேயமுள்ள நீங்கள், சில நேரங்களில் மனதில் பட்டதைப் பேசி விமர்சனத்திற்குள்ளாவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார் உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இதுவரை எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தீர்களே! சிலர் உங்களை அசிங்கப்படுத்தினார்களே! பலரையும் நம்பி ஏமாந்தீர்களே! யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்களே! திருமணம் போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே! இனி இவையெல்லாம் மாறும். உங்களைப் பார்த்தும் பார்க்காமல் போனவர்களெல்லாம் வலிய வந்துப் பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். அலைபாய்ந்த மனசு அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே! இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள்.

எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! இனி உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை நீங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் இருந்ததே! ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்துப் புழுங்கினீர்களே! கவலை வேண்டாம். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே! இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார். என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும்.

வெளிவட்டாரத்தில் அக்கம்-பக்கம் பார்த்துப் பேசுங்கள். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்த-பந்தங்களிடம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் தாமதமாகி முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் விரையம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். போலி புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதியஸ்தானாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். இரத்த சோகை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி மற்றும் சுவாசக் கோளாறும், மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும். சகோதர‌ர்கள் குறைபட்டுக் கொள்வர். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் பழையப் பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. உத்‌தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். திருமணம் கூடி வரும்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் தாய்வழியில் செலவுகள் வரும். வீடு மாறுவீர்கள். வாகனச் செலவு அதிகரிக்கும். மனைவியுடன் பனிப்போர் உண்டு. ஆனால் வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதர‌ர்கள் நினைப்பார்கள்.

வியாபாரத்தில் தொடர்ந்து வந்த போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்கள் இனி முரண்டு பிடிக்கமாட்டார்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்‌தியோகத்தில் நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். அலுவலகத்தில் அதிகம் பேச வேண்டாம். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். இழந்த‌ச் சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் கைகூடும். தள்ளிப்போன திருமணம் பெற்றோரின் ஆதரவால் நல்ல விதத்தில் முடியும். மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை மற்றும் கண்ணில் கரு வளையமெல்லாம் இனி நீங்கும். மாணவ-மாணவிகளே! இனி புத்தகத்தைத் தொட்டால் தூக்கம் வராது. மதிப்பெண் உயரும். நீங்கள் ஆசைபட்ட நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். வகுப்பறையில் ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைஞர்களே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த‌ச் சனி மாற்றம் அழகையும், ஆரோக்‌‌கியத்தையும் தருவதுடன் பணவரவையும், பாதுகாப்பு உணர்வையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வடதிருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

Share this Story:

Follow Webdunia tamil