Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : சிம்மம்

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : சிம்மம்
, வெள்ளி, 16 டிசம்பர் 2011 (18:09 IST)
தலைமைப் பண்பு அதிகம் உள்ள நீங்கள், தராதரம் அறிந்து பழகுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களை கேளிக்கையாக்கிய சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். முதல் முயற்சியிலேயே எல்லாக் காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள்.

எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்துக் கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்‌கியம் அடைவீர்கள். கூச்சல், குழப்பமாக இருந்த குடும்பத்தில் இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். வயசு ஏறிக் கொண்டே போகிறதே! ஒருவரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும் படி திருமணத்தை முடிப்பீர்கள். ஐ.வி.எஃப். போல அதிக செலவுள்ள சிகிச்சைக்குப் பின்பும் அம்மா என்று சொல்ல பிள்ளையில்லை என்று நீங்கள் அழாத நாளில்லை. இனி அழகிய வாரிசு உருவாகும்.

அடிக்கடி இனி வீடு மாற்றத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததைப் போட்டு கடனை வாங்கி சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். பலரின் உள்மனசை புரிந்துக் கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே! இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச்சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். பணவரவு அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். வி.ஐ.பி.கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். ஆனால் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் செலவுகள் கூடும். உறவினர்கள், நண்பர்களில் சிலர் உங்களைக் குறை கூறுவார்கள். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். தொலை தூரத்திலுள்ள புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-அட்டமாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் பிள்ளை பாக்‌கியம் கிட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் பதவி உயரும்.

சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில நேரங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தந்தையாருடன் ஆரோக்‌கியமான விவாதங்கள் வந்துச் செல்லும். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு ஏகப்பட்ட லாபம் எதிர்கடையில் உள்ளவர்கள் பார்த்துவிட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தை பார்க்க முடியவில்லையே என்று நீங்கள் புலம்பி தவிர்த்தீர்களே! இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் உடனே முடியும். மாணவ-மாணவிகளே! மதிப்பெண் உயரும். கலை, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக்கொண்டு வெற்றிப் பெறுவீர்கள். கலைஞர்களே! கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள்.

இந்த சனி மாற்றம் விரக்தியின் விளிம்பில் இருக்கும் உங்களை வெற்றிக்கனியை பறிக்க வைப்பதுடன் பகட்டான வாழ்க்கையையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்:

தே‌னிக்கு அருகில் உள்ள குச்சனூரில் வீற்றிருக்கும் சுயம்பு சனீஸ்வர பகவானை விசாகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

Share this Story:

Follow Webdunia tamil