Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : ரிஷபம்

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : ரிஷபம்
, செவ்வாய், 13 டிசம்பர் 2011 (16:03 IST)
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், அதிர்ஷ்டத்தை அவ்வளவாக நம்பமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து பல வகைகளிலும் மனஉளைச்சல்களையும், நிம்மதியின்மையையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

எப்போது பார்த்தாலும் ஒரு மனஇறுக்கத்துடன் காணப்பட்டீர்களே! சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டீர்களே! சில நேரங்களில் சிறு பிள்ளைத்தனமாகப் பேசி நல்ல நட்பை இழந்தீர்களே! இனி பக்குவமாகப் பேசி பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். எதையோ இழந்ததைப் போல் உள்ள உங்கள் முகம் இனி தெளிவடையும். உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி முழுத்தூக்கம் வரும். குழந்தை பாக்‌கியத்திற்காக ஏங்கினீர்களே! அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். தெய்வப் பிரார்த்னைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பெற்றப் பிள்ளைகளே உங்களை சுமையாக நினைத்தார்களே! உதாசீனப்படுத்தினார்களே! இனி அந்த அவல நிலை மாறும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.

கூடா நட்பால் பாதை மாறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வீடு மாறுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். கையில் காலணா தங்காமல் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகளால் சிக்கித் தவித்தீர்களே! இனி நாலுப்பணம் கையில் தங்கும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள்.

வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அடிவயிற்றில் வலி இருந்ததே! அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்‌கியம் கூடும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் செலவு, உறவினர்களின் அன்புத் தொல்லை, பூர்வீக சொத்தில் சிக்கல்கள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் எடை மிகுந்தப் பொருட்களை கையாள வேண்டாம்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் வீடு, மனை சேரும். அரசால் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு, யோகமும் உண்டாகும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், பிறமொழிக்காரர்கள் உதவுவார்கள். திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும்.

உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும், பண வகையில் இழப்புகளும் மூத்த சகோதர வகையில் மனத்தாங்கலும் ஏற்பட்டாலும் மற்றொரு பக்கம் திடீர் செல்வாக்கும், பணப்புழக்கமும், தங்க ஆபரண சேர்க்கையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள்.

சனிபகவான் 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். ஆனால் கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப்பாருங்கள். குடலுக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது. ஆனால் மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். பலமுறை கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்டீர்களே! இனி மக்கள் ரசனைக் கேற்ப மாறுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் அவமதிக்கப்பட்டீர்களே! ஒரு வேலையும் நிலைக்காமல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தீர்களே! இனி அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்‌தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். முதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைஞர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

இந்த சனிப் பெயர்ச்சி முதல் தரமான ராஜயோகத்தை தருவதுடன், எங்கும் எதிலும் வெற்றி வாகைசூட வைக்கும்.

பரிகாரம்:
தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். மென்மேலும் முன்னேறுவீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil