வெள்ளெருக்கு விநாயகர்!
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
Publish Date: Fri, 10 Oct 2008 (20:38 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “வெள்ளருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே” என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
எனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.
வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
இதற்கடுத்தபடியாக இடம்புரி விநாயகர் வினைகளை தீர்க்கக் கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. வலம்புரி விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க வல்லவர். பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சேர்ந்தவர்.
இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்கும் வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து சாஸ்திரம் ஆகிய குறைகளுக்காக வைக்கப்படும் விநாயகர் இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.