Publish Date: Sat, 19 Jun 2010 (20:57 IST)
Updated Date: Sat, 19 Jun 2010 (20:57 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது. அதேபோல தமிழருக்கென்று இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய காரிய முறை ஏதாவது இருக்கிறதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் முழங்க சூட்டுவது என்பது வழக்கமாக இருந்ததுள்ளது.
நடைமுறையில், நடுவில் ஆரியர்கள் வருகை. அதன்பிறகு பார்க்கும்போதுதான் அக்னி வளர்த்தால், மந்திரங்கள் ஜெபித்தல், வேத மந்திரங்கள் ஓதுதல் இதெல்லாம் வந்தது. அதற்கு முன்பு பார்த்தால் பெரியவர்கள் வாழ்த்து கூறுவார்கள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று அவரவர்கள் மனதிற்கு பட்டதுபோல் வாழ்த்துக் கூறுவார்கள். நம்முடைய தமிழர் பண்பாட்டு முறை என்பது இதுதான். இதில் ஓதுவார்கள் இருப்பார்கள். அவர்கள் தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள். இதில், மங்கள நாண் பூட்டிய பிறகு பாட வேண்டிய பாடல் என்றெல்லாம் உண்டு. அந்தப் பாடல்களை அவர்கள் எல்லா வளங்களும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று பாடுவார்கள். இதுதான் முறையாக இருந்தது. இதில் வளர்பிறை அதிகமாக பார்க்கப்பட்டது. தமிழர் திருமணம் எல்லாம் வளர்பிறையை வைத்துதான், அதாவது சந்திரனை அடிப்படையாக வைத்து பார்க்கப்பட்டது. தேய்பிறையில் திருமணம் நிகழ்த்துவதில்லை. அப்பொழுது நெருப்பு வளர்க்கிறதோ, தீ வளர்க்கிறதோ, வேதங்கள் ஓதுவதோ அதெல்லாம் இல்லாமல் இருந்தது. இது நடுவில் வந்ததுதான்.
அதேபோல, அடக்கம் செய்வது என்று பார்த்தீர்களானால், ஈமச் சடங்கு செய்வது, திருமூலர் தன்னுடைய திருமந்திரப் பாடல்கள் சொல்லியிருக்கிறார். யாரையுமே எரிக்கக் கூடாது. அடக்கம்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார். இப்பவும் சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடக்கம்தான் செய்கிறார்கள். கல் உப்பு இருக்கிறதல்லவா, அதை பரப்பி, உயிர் நீத்தாரை அமர்ந்த நிலையில் வைத்து பத்மாசனம் என்று சொல்வார்கள் அந்த நிலையில் வைத்து, கிழக்கு நோக்கி முகம் இருப்பது போல் வைத்து சுற்றி விபூதிப் பெட்டகத்தால் நிரப்பி அடக்கம் செய்வார்கள். இதுதான் திருமூலர் சொல்லியிருக்கும் அடக்கம் செய்யும் முறை. இது, நம்முடைய எலும்புகள் சீக்கிரம் மண்ணோடு மண்ணாக மக்கி தாவரங்கள் முளைப்பதற்கான வழிவகைகளை கொடுக்கும். அதாவது எந்தவிதமான மாசும் படாமல். எரிக்கும் போது புகையெல்லாம் வருகிறது. இதனால் மாசுபடுகிறது. இந்த எரித்தலும் வேதம் ஓதுபவர்கள் வருகைக்கு பின்னர்தான் இந்தப் பழக்கமும் வந்தது. அதற்கு முன்பு எல்லாமே அடக்கம்தான். யாரையும் எரிப்பது என்பது கிடையாது. நடுவில் வந்ததுதான் எரிக்கும் பழக்கம். தமிழர்களுடையது அடக்கம் செய்வதுதான். அதற்கு சில பாடல்கள் தேவாரத்தில் இருந்து பாடுவார்கள். இவருடைய ஆன்மா முக்தி அடைய வேண்டும் என்று பாடி நல்லடக்கம் செய்வார்கள். இதுதான் முறையாக இருந்தது.
காரியம் என்று சொல்கிறார்களே, 16வது நாள்...
அது நீத்தார் நினைவு நாள். அதாவது 16வது நாள் என்பது என்ன? அந்த திதி வருவதுதான். எந்த ஒரு திதியாக இருந்தாலும் 14 நாள் கழித்து வந்துவிடும். அமாவாசைக்கு அடுத்த 14வது நாள் பெளர்ணமி. திதியை அடிப்படையாக வைத்துதான் அந்த நினைவு நாளை கடைபிடித்தார்கள்.
Webdunia
Publish Date: Sat, 19 Jun 2010 (20:57 IST)
Updated Date: Sat, 19 Jun 2010 (20:57 IST)