அஷ்டமத்து சனி என்றால் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
Publish Date: Wed, 20 Aug 2008 (15:01 IST)
Updated Date: Wed, 20 Aug 2008 (15:00 IST)
அஷ்டமத்து சனி என்பது ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி வருவதுதான்.
தற்போது மகரத்திற்கு அட்டமத்து சனி நடக்கிறது. மகரத்திற்கு எட்டாவது வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். அட்டமத்து சனியில் தொட்டது துலங்காது, அட்டமத்து சனி தசையில் அந்நிய தேசத்தில் புகழ்பெறுவான் என்றெல்லாம் கூறுவார்கள்.
“நட்டதெல்லாம் பாழ், விழலுக்கு இரைத்த நீர், அந்நிய தேசத்திற்கு ஓடிப் போ” என்றெல்லாம் சொல்வார்கள்.
ஊரை விட்டு, தேசத்தை விட்டு ஓடிப் போய், திருட்டு ரயிலேறி(யாவது) போய் வேறு ஊரில் பிழைத்தால் புகழ் அடையலாம். குறைந்த பட்சம் ஊரை விட்டு வேறு ஊருக்காவது போவது நல்லது என்று கூறுவார்கள். காரணம் இருக்கும் இடத்தில் எதுவும் ஈடேறாது.
மாவட்டத்தையாவது தாண்டியாக வேண்டும். வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். அட்டமத்து சனி நடக்கும் போது புத்தி வேலை செய்யாது, உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.
வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் தண்டனை அனுபவிப்பார்கள். எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார்கள். தேவையே இல்லாமல் சிறைக்கு போவார்கள். 2 வருடம் கழித்து அவர் மீது தவறில்லை என்று தெரியவரும். “அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி” என்ற பழமொழி உள்ளது. தர்ம அடி என்று சொல்வார்களே அது போல போற வர்றவனை எல்லாம் அடிக்க வைக்கும்.
இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி இருக்கும். ஆனால் அது போன பிறகு அவர்களிடம் பேசினால் ஞானி போல பேசுவார்கள். அதுமாதிரி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்துவிட்டு போயிருக்கும் சனி.
அட்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள்.
சனி தசை என்பது 19 வருடம். பொதுவாக சனி இரண்டரை வருடம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். சந்திரனுக்கு 8sல் சனி வருவது அட்டமத்து சனி. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் சனிதான்.
அட்டமத்து சனிக்குப் பரிகாரம் உண்டா?
சனி தசை வந்துவிட்டாலே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். யார் என்ன சொன்னாலும் நம்பக் கூடாது. உங்க மனைவியை அங்க பார்த்தேன், அவர் அப்படியா? மாமனார், மாமியாரைப் பற்றி எல்லாம் தவறாகச் சொல்வார்கள்.
எதையும் நம்பக் கூடாது. அட்டமத்து சனி, நேரடியாக சண்டையை உருவாக்காமல், நம்மைச் சார்ந்த உறவினர்கள் மூலமாக ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
பரிகாரம் என்று சொன்னால், முக்கியமாக சந்தேகப்படுதலை தவிர்க்க வேண்டும். உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சுவையான உணவுகளைக் குறைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாமல் சாப்பிடவும், சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை கேவலாமாக எது சொன்னாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஊனமுற்றவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு உதவலாம். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்கலாம்.
எதை எடுத்தாலும் தாமதமாகும். கோபப்படக் கூடாது. தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லலாம்.
Webdunia
Publish Date: Wed, 20 Aug 2008 (15:01 IST)
Updated Date: Wed, 20 Aug 2008 (15:00 IST)