Publish Date: Wed, 16 Jul 2008 (18:37 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
அணு சக்தி ஒப்பந்ததால் இந்தியாவுக்கு நன்மை பயக்குமா அல்லது இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகுவைக்கும் செயலா என நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது.
இதுதொடர்பான கேள்வியுடன் ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் அவர்களை நாம் சந்தித்த போது, இந்தியா- அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்ததால் நமது நாட்டிற்கு துளி கூட நன்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அணு என்பது புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற 3 பொருட்களின் கலவை. இதில் முக்கிய பொருளான எலக்ட்ரான் சனியின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது.
தற்போது சனி, பகை வீட்டில் பகை கிரகத்துடன் சேர்ந்துள்ள நிலையில் நிறைவேற்றப்படும் இந்த அணு சக்தி ஒப்பந்தம், இந்தியாவுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
அணு சக்தி ஒப்பந்த ஆவண வகைகளில் இந்தியா கையெழுத்திட்டாலும், இதனை நிறைவேற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சனி ஏற்படுத்துவார். இதன் காரணமாக இந்த ஒப்பந்தத்தை எதிர்காலத்தில் முழுமையாக நிறைவேற்ற முடியாமலும் போகக் கூடும்.
இந்தியாவின் முக்கிய கிரகமான சனி, தற்போது பகை வீட்டில் உள்ளதால் நாட்டின் அரசியல் நிலவரம் உள்ளிட்ட எந்த முக்கிய நிலவரங்களும் ஸ்திரமாக இல்லை என்பதால், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படும்.
அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அது நிச்சயமாக அமெரிக்காவுக்கே அதிக பலன்களை அளிக்கும் என உறுதிபடக் கூறலாம்.