பாகிஸ்தான் தேர்தல் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது ஏதாவது மாற்றத்தை அளிக்குமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
Publish Date: Sat, 19 Jan 2008 (12:38 IST)
Updated Date: Sat, 19 Jan 2008 (12:38 IST)
பாகிஸ்தானின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது அதன் எதிர்காலம் மோசமாக இருக்கும். அந்நாடு தீவிரவாதிகளின் கையில் சிக்கும். பாகிஸ்தானின் கிரக அமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. பொதுவாக பாகிஸ்தான் தற்போது ராகு கேதுவின் பிடியில் சிக்குண்டுள்ளது.
ராகு கேது சூழ்ந்திருந்தால் அதனை காலசர்ப தோஷம் என்போம். அந்த நாட்டின் அனைத்து கிரகங்களையும் ராகு கேது சூழ்ந்துள்ளது. எனவே அந்நாடு அடக்கு முறைக்கு ஆட்படும். அந்நாட்டு மக்கள் பயந்து ஒடுங்கி வாழும் சூழ்நிலை ஏற்படும். பிறகு 2009ல் அமைதியான நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
தேர்தல் தேதி மாற்றத்தால் எல்லாம் எந்த சாதகமான மாற்றமும் இல்லை. பயங்கரவாத தாக்குதல் இன்னும் அதிகரிக்கும், இளைஞர்கள் கை ஓங்கும். நல்லவை எதுவும் எதிர்பார்க்கும் படி இல்லை. செப்டம்பர் வரை இந்த நிலைதான் நிலவும்.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்து?
பாகிஸ்தான் தற்போது பாவ கிரகங்களால் சூழப்பட்டுள்ளது. பாகிஸ்தானை அதாவது செவ்வாய், சனி கிரகம் சூழ்ந்துள்ளது. செவ்வாய் ராணுவம், சனி என்பது மண்ணின் மைந்தர்கள். பூர்வ குடி மக்கள். இவை இரண்டுக்கும் தான் தற்போது சண்டை. இவை இரண்டுக்கும் எப்போதும் ஒத்து போகாது. ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய இயலாது. தேர்தல் வந்தாலும் எந்த நல்ல பலனையும் அளிக்காது. ஏற்கனவே அறிவிக்கப்படாத சண்டை நடக்கிறது. இனி அது தொடரும். ஆட்சியாளர்களின் தூண்டுதலால் இந்த சண்டை பயங்கரமாகும்.
பர்வேஸ் முஷாரஃப்பின் நிலை?
முஷாரஃபின் ஜாதகத்தை வைத்துப் பார்த்ததில் ஏப்ரல், ஆகஸ்ட்டில் கொல்லப்படவும் வாய்ப்புண்டு. அல்லது அவரது வலது, இடது கைகள் என்று சொல்லப்படும் உயர் அதிகாரிகள் கொல்லப்படலாம். பர்வேஸ் முஷாரஃப் பதவி விலகவும் நேரிடும்.
பாகிஸ்தானை பாவ கிரகங்கள் சூழ்ந்திருப்பதால் சாதகமான நிலை இல்லை. தேர்தல் நடந்தாலும் பலனளிக்காது. ஆட்சியாளர்கள் நிம்மதியாக ஆட்சி செய்ய இயலாது.
செப்டம்பர் வரை இந்த நிலைதான் நீடிக்கும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு எப்படி இருக்கும்.
பாகிஸ்தான் தூண்டுதலால் மறைமுகமான தாக்குதல் மிக அதிகமாகும். நேரடியான தாக்குதல் ஏற்படாது. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து, கலகம் உண்டாகும். காஷ்மீர் பிரச்சினை தீவிரமாகும்.
பாகிஸ்தானில் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவிற்கு ஒரு தலைவர் உருவாக வாய்ப்புள்ளதா?
வாய்ப்பில்லை, 2009ல் வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பு உண்டு