அழகு, படிப்பு, வசதி இருந்தும் திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது? இது ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
Publish Date: Tue, 20 Jan 2009 (18:31 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (18:30 IST)
இதுபோன்ற அமைப்புள்ள ஜாதகங்கள் என்னிடம் வருவதுண்டு. சமீபத்தில் ஒரு பெற்றோர் தங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தனர்.
பெண்ணைப் பார்த்தால் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூற மாட்டார்கள். அப்படியொரு அழகு. நாட்டின் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் திட்ட மேலாளராக அப்பெண் பணியாற்றி வருகிறார். ஆண்டு சம்பளம் 6 இலக்கத்தைத் தாண்டும்.
தந்தையும் வசதியானவர் என்பதால் பெண்ணின் திருமணத்திற்குத் தேவையான நகைகளை கிலோக்கணக்கில் வாங்கி வைத்துள்ளார். ஆனால் வரும் வரன் எல்லாம் தட்டிச் சென்றதால் மனமுடைந்திருந்தனர்.
இதையடுத்து வேறு பிரிவைச் சேர்ந்த மணமகனாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஜாதகம் தேடினர். அதிலும் தோல்வியே கிடைத்தது. இதன் பின்னர் பையனைப் பிடித்திருந்தால் காதல் திருமணம் செய்து கொள்ளக் கூட பெண்ணுக்கு அனுமதி அளித்தனர். ஆனால் அப்பெண் காதல் தோல்வியைச் சந்தித்ததால் மீண்டும் காதலிக்கும் எண்ணம் எதுவும் இல்லை எனக் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இப்படி அழகு, படிப்பு, வசதி உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறததற்கு காரணம் கிரக அமைப்புகள்தான். 7,8ம் இடங்களில் அடுத்தடுத்து மோசமான கிரக அமைப்பு, கிரக நிலை காணப்பட்டது. 8வது வீட்டில் சனியும், கேதுவும் இருந்தனர்.
அப்பெண்ணுக்கு விருச்சிக லக்னம். அதற்கு 7ஆம் இடத்திற்கு உரிய கிரகமான சுக்கிரன், ராகுவுடன் இணைந்திருந்தார். மேலும், அடுத்தடுத்து வந்த தசைகள் அனைத்தும் மோசமாக இருந்தது. இப்படி படிப்பு, அழகு, செல்வம், வசதி வாய்ப்பு, அந்தஸ்து அனைத்தையும் கொடுத்து வாழ்க்கைத் துணையை மட்டும் அமையவிடாமல் கிரக அமைப்பு தடுத்து விட்டது.
இந்தச் சூழலில்தான் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்திருந்தார்கள். ஜாதகத்தைக் கணித்த நான் குறிப்பிட்ட காலகட்டத்தைக் கூறி, அதற்குள் ஒரு ஜாதகம் உங்கள் வீடு தேடி வரும். ஆனால் அந்த ஜாதகர் சிறிய ஊனத்துடன் இருப்பார்.
அந்தஸ்து, தகுதி, படிப்பு, அழகு ஆகியவற்றை கருதாமல் அவரை நீங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டால், உங்கள் மணவாழ்வு சிறப்பானதாக அமையும் என அப்பெண்ணிடம் கூறினேன்.
ஆனால் இந்தக் கருத்தை அந்தப் பெற்றொர் ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், என் மகளின் அழகிற்கும், அறிவுக்கும் ஏற்ற வரன் அமைய வாய்ப்பே இல்லையா என என்னிடம் கேட்டனர்.
எவ்வளவு அழகும், அறிவும் இருந்தாலும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வது கிரக அமைப்புதான் என்பதால், உதித்த (பிறந்த) போது விதிக்கப்பட்டது என்ன என்பதை அறிந்து கொண்டு அதன்படி பெண்ணிற்கு மணவாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.