ஒரு சிலர் மெத்தப் படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
Publish Date: Sat, 03 Jan 2009 (17:18 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (16:51 IST)
சனி கடகத்திற்கு வந்தது முதலே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. புத்தாண்டு முதல் (2009) இளங்கலைப் படிப்பை ஒரு பிரிவிலும், முதுகலைப் படிப்பை மற்றொரு பிரிவிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தற்போது சனி சிம்மத்தில் இருப்பதால் ஒரே துறையில் படிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இளங்கலையில் அறிவியல் படித்தார்; முதுகலையில் கலைத்துறையில் பட்டம் வாங்கினார்; ஆனால் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் 6 மாத பட்டயப்படிப்பை மற்றொரு துறையில் முடித்து விட்டு அதே துறையில் வேலைக்கு சேர்ந்து விட்டார் என்பது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும்.
எனவே, ஒருவரது ஜாதக அமைப்பில் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் 2வது இடம் ஆரம்பக் கல்வியும், 4ஆம் இடம் உயர்கல்வியும், 9வது இடம் மேல்நிலை (பல்கலை, கல்லூரி) கல்வியும் குறிப்பதால் இங்கே குறிப்பிட்ட மூன்று இடங்களும் செம்மையாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய வீடுகளுக்கு உரிய கிரகங்களைத் தாண்டி புதன், சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். தேக்கி வைப்பது (அறிவாற்றல்) சந்திரன் என்றால் அதனை தக்க சமயத்தில், தக்க முறையில் வெளிப்படுத்துவது புதன்.
ஆரம்பத்தில் என்ன தசை நடக்கிறது. அடுத்து என்ன தசை வரப்போகிறது என்று ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு படிக்கும் துறையைத் தேர்வு செய்தால் மனதில் தடுமாற்றம் ஏற்படாது.
மாணவர்கள் மீது பெற்றோர் தங்களின் விருப்பத்தை திணிக்கக் கூடாது. அதேபோல் மாணவர் ஒரு துறையில் சாதிக்க விரும்பினால் அத்துறையில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகளை ஜோதிட ரீதியாக அறிந்து கொண்டு செயல்படலாம்.
இதனை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பெற்றோர் தங்கள் மகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருந்தனர். அனிமேஷன் துறையில் மகனுக்கு விருப்பம் உள்ளதாகவும் அதனைப் படிக்க வைக்கலாமா என்றும் கேட்டனர்.
அவர்கள் மகனுக்கு அப்போது சுக்கிர தசை நடந்து கொண்டிருந்தது. ஆனால் 24 வயதில் அது முடிந்துவிடும். எனவே, அனிமேஷன் துறையில் இப்போது உங்கள் மகனுக்கு ஆர்வம் இருந்தாலும் 24 வயது வரைதான் அத்துறையில் சாதிக்க முடியும். அடுத்து சூரியன் தசை என்பதால் அனிமேஷன் துறையில் ஆர்வம் பிறக்காது. எனவே வேலையில் ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டு வேறு வேலையை தேடுவதை விட இப்போதே உங்கள் மகனுக்கு ஆர்வமுள்ள மற்றொரு படிப்பில் சேர்த்து விடுங்கள் என்று ஆலோசனை கூறினேன்.
குழந்தைகளைப் பொறுத்த வரை என்னென்ன தசை நடக்கிறதோ அப்போது குறிப்பிட்ட துறையில் சாதிப்பார்கள். ஆனால் அந்த தசை முடிந்தவுடன் அதில் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே வேறு வேறு தசைகள் வந்தாலும் தொடர்ந்து ஒரே துறையில் சாதிக்கும் கிரக அமைப்பு இருக்கும். உதாரணமாக ஒரு ஜாதகருக்கு சுக்கிரன் தசை முடிந்து சூரிய தசை வரும் போது, சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் அமர்ந்தால், சுக்கிரனின் சேர்க்கை அல்லது பார்வை சூரியன் மீது இருப்பதால் அவர்கள் கலை ஆர்வம் மேலும் தொடரும்.
உதாரணமாக கலைத்துறையில் எடுத்துக் கொண்டால் ஒரு சில இசையமைப்பாளர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை வாரி வழங்குவர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அவர்கள் இருக்கும் இடம் தெரியாது. இதெல்லாம் தசா புக்திகளின் மாற்றம்தான்.
Webdunia
Publish Date: Sat, 03 Jan 2009 (17:18 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (16:51 IST)