அமங்கலியானாலும் தாயாரை வைத்து நல்ல காரியம் துவக்குவது சரியா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
Publish Date: Mon, 25 Aug 2008 (12:20 IST)
Updated Date: Mon, 25 Aug 2008 (12:20 IST)
அதுதான் சரி. தாய்தான் அதை செய்ய வேண்டும். தாய் அமங்கலி என்பதால் அவர்களை செய்யக் கூடாது என்று சொல்வதெல்லாம் ரொம்பத் தவறு.
தாயைத்தான் குடியிருந்த கோயில் என்று சொல்வார்கள். கோயிலையே நாம் எப்படி நல்லது கெட்டது என்று பிரிப்போம்.
தாய்க்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன்தான் மனோகாரன். புத்திக்குரியவன். எனவே தாய்க்கும், புத்திக்கும் உரியது ஒரே கிரகம்தான்.
அதனால்தான் தாயை தண்ணிக் கரையில் பார்த்தால் பிள்ளையை வீட்டில் போய் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள்.
தாயைப் போல பிள்ளை, நூலப் போல சேலை என்றெல்லாம் அதனால்தான் சொல்வார்கள். சந்திரன்தான் முக்கியம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் அவர்கள் தாயை மதிப்பார்கள். தாயை மதிக்க மதிக்க அவர்கள் வளமையாவார்கள்.
கணவனை இழந்த அம்மாவாக இருந்தாலும், எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களை வைத்துத்தான் அதனைத் துவக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் நிச்சயம் அந்த குடும்பத்தினர் நல்லபடியாக இருப்பார்கள்.
ஒரு மகன் எப்படி வந்தான். தாய் இல்லாமல் வந்துவிட்டானா? அவனது நல் வாழ்விற்காக தாய் எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதற்காக அவர்களுக்குத்தான் எல்லா விஷயத்திலும் முதல் மரியாதைத் தர வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.