Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் சும்மா இருக்க மாட்டேன்... ஸ்டாலினுக்கு டிடிவி வார்னிங்!

நான் சும்மா இருக்க மாட்டேன்... ஸ்டாலினுக்கு டிடிவி வார்னிங்!
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:56 IST)
மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவுக்கும் டிடிவி தினகரன் தனது அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
நாகரிக அரசியலுக்கும் திமுகவுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு.க.ஸ்டாலினும், ஆ.ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.
 
தமிழ்நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண்ணான, கருணாநிதியின் வாரிசுகள், அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.
 
தேர்தல் ஜூரம் ஆரம்பித்து விட்டதால் ஸ்டாலின், இனி கைத்தடிகளைத் தூண்டி விட்டு இப்படியெல்லாம் பேச வைப்பார். அம்மாவை (ஜெயலலிதாவை) கொச்சைப்படுத்தும் இந்த யோக்கிய சிகாமணிகள், அவரது மரணத்தைப் பற்றியும் வழக்கம்போல ‘ரொம்பவும் அக்கறை உள்ளவர்கள்’ போன்று அவதூறு பரப்பி குளிர்காய நினைப்பார்கள். 
 
இவர்களின் மலிவான பிதற்றல்களைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இதுபோன்று வரம்பு மீறி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாலும், அதிகாரத்தில் இருக்கும் போது போட்ட ஆட்டங்களாலும் தான் கடந்த 10 ஆண்டுகளாக இவர்களை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். 
 
வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. அம்மா இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாக நினைத்து கற்பனை ராஜ்ஜியத்தில் மிதக்கும் இவர்களின் கனவு ஒரு நாளும் பலிக்கப்போவதில்லை.
 
தீயசக்தி கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமான அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களாகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
 
அதனால் ஸ்டாலினும், ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரிகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா?