Publish Date: Thu, 30 Mar 2023 (10:41 IST)
Updated Date: Thu, 30 Mar 2023 (10:42 IST)
சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பல மாணவர்கள் வராத நிலையில் தற்போது 10ம் வகுப்பு செய்முறை தேர்விற்கும் மாணவர்கள் பலர் வராததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில் மொழிப்பாட தேர்வு, மற்ற தேர்வுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் வராத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு 25 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் கடந்த மார்ச் 20ம் தேதி முதலாக நடந்து வந்தது. இதில் பல மாணவர்கள் பங்கேற்காததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்முறை தேர்வுகளுக்கான கால அவகாசத்தை அரசு தேர்வுத்துறை நாளை வரை நீட்டித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்செண்ட் இல்லாமல் தேர்வு எழுத வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடியால் பல்வேறு காரணிகளால் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கல்வித்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.