Publish Date: Wed, 01 Nov 2023 (15:15 IST)
Updated Date: Wed, 01 Nov 2023 (15:16 IST)
நாளை மதுரையில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போகிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும் இதைவிட மோசமான ஆளுநர் இதுவரை தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து இருக்க வேண்டும் என்றும் இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை மதுரையில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அதை புறக்கணிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மீதெல்லாம் மரியாதை இல்லை என்றும் அதிலிருந்து வந்தவர் தான் என்பதால் ஆளுநர் மெத்தனத்தில் செயல்படுகிறார் என்றும் கூறினார்.
நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.