பரோலில் வருகிறார் பேரறிவாளன்: சட்டத்தில் இடமுள்ளது என அமைச்சர் தகவல்!
பரோலில் வருகிறார் பேரறிவாளன்: சட்டத்தில் இடமுள்ளது என அமைச்சர் தகவல்!
Publish Date: Mon, 31 Jul 2017 (16:37 IST)
Updated Date: Mon, 31 Jul 2017 (16:39 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் பேரறிவாளன் உட்பட 7 பேர். இந்நிலையில் அதில் பேரறிவாளன் பரோல் கேட்டு விண்ணப்பிருந்தார்.
உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக படுக்கையில் இருக்கும் தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோல் வேண்டும் என பேரறிவாளன் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால் அவரது மனுவை இதுவரை சிறைத்துறை ஏற்கவில்லை. இது தொடர்பாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்க பல்வேறு கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க கோரிக்கை வைத்தது. இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரோல் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்துறை செயலாளருக்கும் பேரறிவாளன் பரோல் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன். பேரறிவாளனுக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.