Publish Date: Wed, 22 Jun 2022 (13:38 IST)
Updated Date: Wed, 22 Jun 2022 (13:57 IST)
ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறிய நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கும்படி உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருகிறார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற எம்.ஜி.ஆர். பாடலை போல ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும். தவறான பாதையில் ஓ.பன்னீர்செல்வம் பயணித்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் மதிப்பு அளிக்க வேண்டும் எனம் ஜெயக்குமார் தெரிவித்தார்.