Publish Date: Thu, 19 Jul 2018 (14:26 IST)
Updated Date: Thu, 19 Jul 2018 (14:31 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக திமுக கூறியுள்ளது. மேலும் அதிமுகவும், அதேபோல் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக எம்பி மைத்ரேயன் இதுகுறித்து கூறியபோது, 'மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக எப்படி ஆதரவு தரும்? என்றும் திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத நிலையில் ஆதரவு என்பது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தெலுங்கு தேச கட்சி ஆந்திர மாநிலத்தின் தேவை ஒன்றுக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாகவும், அதனால் இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு கிடையாது என்றும் காவிரி பிரச்சனையின்போது எந்த மாநிலமும் தமிழகத்திற்கு ஆதரவு தரவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.