Publish Date: Thu, 15 Feb 2018 (09:59 IST)
Updated Date: Thu, 15 Feb 2018 (10:04 IST)
இரு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததால், தமிழக மின் வாரிய ஊழியர்கள் நாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 டிசம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதற்காக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் வாரிய அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. நிலுவைத்தொகை இல்லாமல் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஊழியர்கள் அதை ஏற்கவில்லை..
இந்நிலையில், இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், நாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி மின்வாரிய இயக்குனர்கள் நேற்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.