Publish Date: Tue, 25 Mar 2025 (13:48 IST)
Updated Date: Tue, 25 Mar 2025 (13:53 IST)
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேறி லிங்கத்தை தரிசிக்க வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் மலையேற தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 43 வயதான சிவா, தனது சகோதரர், நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையேற திட்டமிட்டார். இதற்காக அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு வந்தனர்.
நேற்று இரவு, சிவா மற்றும் அவரது குழுவினர் வெள்ளியங்கிரி மலை ஏறி, 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த பிறகு, இன்று காலை அவர்கள் மீண்டும் மலையில் இருந்து இறங்க ஆரம்பித்தனர். அப்போது 3-வது மலையையடையும்போது, சிவாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மயங்கி விழுந்தார்.
உடனே அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக டோலி கட்டி அவரை கீழே அழைத்துச் சென்றனர். கீழே வந்ததும், அங்கு இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றி, பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால், அப்போது சிவா உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவா இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.