இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று 68 சதவிகித பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரியின் 'மக்கள் ஆய்வகம்' நடத்திய ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் மக்கள் முன் ஈழப் பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை வைத்துள்ளனர்.
தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசு : இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது என்று 86.5 சதவிதம் பேரும், ராஜபக்சே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது என்று 10.5 சதவிதம் பேரும், தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது என்று 2.0 சதவிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய - மாநில அரசுகள் மீது கோபம் : இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும்போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக 85.0 சதவிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மத்திய- மாநில அரசுகள் மீது 44.5 சதவிதம் பேரும், 25.5 சதவிதம் பேர் ராஜபக்சே அரசின் மீதும், பன்னாட்டுச் சமூகங்கள் மீது 12.0 சதவிகித பேரும், விடுதலைப் புலிகள் மீது 3.0 சதவிகித பேர் கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
உடனடி தீர்வு போர் நிறுத்தம் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என 90 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனி ஈழமே நிரந்தரத் தீர்வு : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று 68 சதவிகித பேரும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச் சுயாட்சி என்று 21 சதவிகித பேரும், தமிழரைப் பௌத்த-சிங்களருக்குச் சமமாக அங்கீகரித்து இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 4.5 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈழப் பிரச்சனையில் தமிழக அரசியல் களச் சூழல் : ஈழப் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் ராஜபக்சே அரசின் மீது எந்தவிதச் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை என 91.5 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி உருவாகியுள்ளது என 43 சதவிகித பேரும், மத்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது என 32.5 சதவிகித பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈழப் பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறை : தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரசின் தயவு தேவைப்படுவதால், காங்கிரசைப் பகைத்துக்கொள்ளாமல் அனுசரித்துப் போகிறது என 70.5 சதவிகித பேரும், ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறது என 22 சதவிகித பேரும், இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிஜமாகவே குழப்பத்தில் உள்ளது என 4 சதவிகித பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழருக்காக உண்மையான அக்கறை கொண்ட கட்சி எதுவுமில்லை : இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள தமிழகக் கட்சி எதுவுமில்லை, எல்லாமே தேர்தல் அரசியலே செய்கின்றன என 52 சதவிதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அக்கறையுள்ள குறிப்பிட்ட கட்சிகளைப் பொருத்த வரையில், தமிழர் தேசிய இயக்கம் 12%, ம.தி.மு.க 9.5%, விடுதலைச் சிறுத்தைகள் 6.5%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5%, தி.மு.க 4%, பா.ம.க 3.5%, காங்கிரஸ் 2.5%, அ.தி.மு.க 2%, தே.மு.தி.க 1%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1%
துணிச்சலுடன் கருணாநிதி செயல்பட வேண்டும் : ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக செயல்படாமல் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் 86 சதவீதம் பேரும், ஆட்சி பயத்தை விடுத்து துணிச்சலுடன் கருணாநிதி செயல்பட வேண்டும் என்று 71 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.
ஆட்சியை இழந்தால் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வருவார் : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒருவேளை ஆட்சியை இழந்தால் மீண்டும் கருணாநிதி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளை மன்னிக்க வேண்டும் : காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் மக்களின் எதிர்பார்ப்பு குறித்த கேள்விக்கு இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களை மன்னித்தது போல விடுதலைப்புலிகளையும் மன்னிக்க வேண்டுமென்று 66 சதவீதம் பேரும், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று 22 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல் இடம் வகிக்கும் தமிழ்நாடு : நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனைதான் தமிழ்நாட்டில் முதல் இடம் வகிக்கும் என்று 30 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். மத்திய அரசின் செயல்பாடுகள் இலங்கை அரசை ஆதரிப்பதாகவே உள்ளது என்று 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அரசு இலங்கைக்கு போர் தளவாடங்களையும், ராணுவப் பயிற்சியையும் வழங்குவதை நிறுத்த வேண்டுமென்று 49 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஆளும் கட்சிக்கு எதிராகவே அமைப்பு : தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சனை முக்கிய இடத்தை பெற்றால் அதன் வெளிப்பாடு ஆளும் கட்சிகளுக்கு எதிராகவே அமையும் என்று 68 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவீதம் பாதிப்பு ஏற்படும் என்றும், மத்தியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 24.5 சதவீத எதிர்ப்பும், தி.மு.க.வுக்கு 21 சதவீத எதிர்ப்பும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.