இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து வரும் 4 ஆம் தேதி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், போர் நிறுத்தம் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் கடந்த 30ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கமும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து நீதிமன்றங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
இதையடுத்து வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4ஆம் தேதி நடத்தும் பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதுடன் அதில் கலந்து கொள்வது என்றும், 5ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்துவது என்றும், தீக்குளித்த முத்துக்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.