Publish Date: Wed, 21 Jan 2009 (17:04 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (17:04 IST)
சென்னை: விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஜனவரி 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுடெல்லியில் பாஜகவின் தேசிய ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாகவும், இக்கூட்டத்தில் தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது பற்றி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
29ஆம் தேதி கூட்டத்தில் தம்முடன், கட்சியின் மாநில தலைவர் இல. கணேசன், மாநில செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்த திருநாவுக்கரசர், மக்களவைத் தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
இலங்கை பிரச்சினையில் தமிழக கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகவும், தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.