Publish Date: Wed, 21 Jan 2009 (16:08 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (16:08 IST)
'கள்' இறக்கும் போராட்டம் அறிவித்தவுடன் அதற்கு எதிராக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், டாஸ்மாக் கடைகளை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட தயாரா? என்றும் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள், பனை, தென்னை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து 'கள்' இறக்கும் போராட்டத்தை நடத்துவது அனைவரும் அறிந்ததே. இதில் அவர்கள் ஓரிடத்தில் கூடுவதற்குகூட தடைவிதித்து, போராட்டத்திற்கு செல்வதற்கு முன்பே ஆங்காங்கே அவர்களை கைது செய்வதும், உரிமைக்காக போராடும் அவர்களை ஒன்று சேராமல் தடுப்பதும் கண்டனத்துக்குரியது. இது விவசாயிகளுடைய ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்.
'கள்' இறக்கும் போராட்டம் அறிவித்தவுடன் அதற்கு எதிராக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் நடத்தாதது ஏன்? டாஸ்மாக் கடைகளை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட தயாரா?
கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பனை, தென்னை தொழிலாளர்கள், சமத்துவ கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு முழுமையான மது விலக்கை அமல்படுத்தப் போகிறதா? அல்லது விவசாயிகள், பனை, தென்னை தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கப்போகிறதா? என்பதை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று சரத்குமர் கூறியுள்ளார்.